வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.5.38 கோடியில் வசந்த மண்டபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2026 05:07
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், 5.38 கோடி ரூபாய் செலவில் வசந்த மண்டபம் கட்டும் பணிகள் துவங்க உள்ளதை அடுத்து, கொடி மரம் அகற்றும் பணிகள் துவங்கின.
மேட்டுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரத்தில் சுதைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மஹா மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை கட்ட, 5.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கருவறை, மகா மண்டபம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. 80 அடி நீளத்திலும், 60 அடி அகலத்திலும் வசந்த மண்டபம் கட்டும் பணிகள் துவங்க உள்ளது. இந்த இடத்தில் உள்ள கொடிமரத்தை அகற்ற கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கொடி மரத்தை சுற்றி உள்ள செம்பு கவசங்களை அகற்றும் பணிகள் துவங்கின. அப்போது கோவில் உதவி கமிஷனர் (பொறுப்பு) சரவணன், கோவை இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் உஷா நந்தினி, ஆய்வாளர் ஹேமலதா மற்றும் கோவை மாவட்ட கோவில் நகைகள் சரிபார்க்கும் குழுவினர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து கோவில் உதவி கமிஷனர் சரவணன் கூறுகையில்," வனபத்ரகாளியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வசந்த மண்டபம் கட்டும் பணிகள் நடைபெற உள்ளதை அடுத்து, அந்த இடத்தில் உள்ள கொடிமரம் அகற்றப்பட உள்ளது. மண்டபம் கட்டி முடிக்கும் போது, புதிய கொடி மரம் அமைக்கப்படும்," என்றார்.