பிறவிப்பிணியை வேரறுக்கும் திருநாமம் நாராயணா. இதனை தூங்கும்போதும் சொல்ல வேண்டும் என்னும் பொருளில் துஞ்சும் போதும் நினைமின்; துயர்வரில் அழைமின் என்று ஆழ்வார்கள் பாடியுள்ளனர். இதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை, தூக்கத்தில் பெருமாளைக் கூப்பிட வேண்டும் என்று அர்த்தம் எடுக்கக் கூடாது. தூக்கம் வரும் வரையில், நலம் தரும் திருநாமம் சொல்லி அவனைக் கூப்பிட வேண்டும், என்கிறார். நாராயணா நாராயணா என்றுசொல்லிக் கொண்டே தூங்கச் செல்ல வேண்டும். அதேபோல, காலையில் நாராயணா நாராயணா என்ற படியே படுக்கையை விட்டு எழ வேண்டும். அப்போது தூங்கிய போதும் சொன்ன பலன் கிடைத்துவிடும், என்கிறார். இந்த விளக்கத்தை அளித்த பெரியவாச்சான் பிள்ளையை வியாக்யான(உரை) சக்கரவர்த்தி என்று சிறப்பிப்பர்.