பதிவு செய்த நாள்
15
ஜூலை
2013
11:07
செவ்வாய்பேட்டை: சேலம், செவ்வாய்பேட்டை லட்சுமி நாராயண ஸ்வாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. சேலம், செவ்வாய்பேட்டை, மாரிநாயக்கன் தெருவில் உள்ள அஷ்ட லட்சுமி சமேத லட்சுமி நாராயண ஸ்வாமி கோவில், மகா கும்பாபிஷேக விழா கடந்த, 12ல், துவங்கியது. காலை, 8 மணிக்கு புன்யாஹம், வாஸ்து சாந்தி மாலை, 5 மணிக்கு அக்னிப்ரதிஷ்டை, உக்தஹோமம் நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது. மறுநாள், 13ம் தேதி காலை, 8 மணிக்கு மஹா சாந்திஹோமம், மாலை, 5 மணிக்கு ப்ரதான ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, 8.22 மணிக்கு மேல், 10.29 மணிக்குள் மஹா பூர்ணாஹூதி, அக்னி கும்பசமாரோபனம், யாத்ராதானம், தஸதானம் செய்து மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, மூன்று நாளாக தினசரி காலை, 11 மணியளவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று முதல், ஆகஸ்ட், 31ம் தேதி வரை மண்டலபூஜை நடக்கிறது. தினசரி காலை,10 மணிமுதல் சிறப்பு அபிஷேகம், 12 மணிக்கு தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.