வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2014 12:07
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் நடந்த திருக்கல்யாண வைபவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் பிரதான திருவிழாவான பிரம்மோற்ஸவ விழா நடந்து வருகிறது. இதன் ஐந்தாம் திருவிழாவான நேற்று சுவாமிக்கும், பூதேவி, ஸ்ரீதேவி தாயார்களுக்கும் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. அதிகாலை சிறப்பு அபிஷேகம், பூஜைகளுக்கு பின் கோயில் முன் அமைக்கப்பட்ட ஆண்டாள் அலங்கார மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். அவரை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பக்தர்கள் புடைசூழ அழைத்துவரப்பட்டனர். அங்கு மூவருக்கும் 18 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர், மணமக்கள் மாலைமாற்று வைபவமும், அதைத்தொடர்ந்து திருக்கல்யாணமும் நடந்தது. சேதுநாராயணப் பெருமாள், தாயார்கள் இருவருக்கும் தாலி அணிவித்தார். பக்தர்கள் மலர்களை தூவி வணங்கினர். பின் சிறப்பு பூஜைகளும், திருமண விருந்து நடந்தது. கோயில் மண்டபத்தில் மூவரும் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில், சுவாமி குதிரைவாகன எழுந்தருளலும், திவ்யநாம பஜனை வழிபாடும் நடந்தது. கோயில் சேவா சமிதி டிரஸ்ட் செயலர் நாராயணன், தலைவர் ராஜகோபாலன், நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.