பதிவு செய்த நாள்
28
ஆக
2014
11:08
கமுதி : ராமநாதபுரம், கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் ’சாக்கு உடை’ அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயிலில் நூறு ஆண்டுகளுக்கு மேல் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. சாக்குகளுக்குள் வைக்கோலை திணித்து, ஆண்கள் உடையாக அணிந்து உணவு அருந்தாமல் நேர்த்திக் கடன் செலுத்துவது இவ்விழாவின் சிறப்பு.
முகத்தையும் மூடிவிடுவதால், சாக்கு வழியாக தண்ணீர் கொடுப்பர்; விசிறியால் வீசுவர். நேற்று நடந்த விழாவில் பக்தர்கள் கையில் ஊன்றுகோலுடன், சலங்கை கட்டிக்கொண்டு 2 கி.மீ., வரை ஆடிக்கொண்டே, முளைப்பாரி எடுத்த பெண்களுடன் சென்றனர். பக்தர்கள் கூறுகையில், ’குடும்பப் பிரச்னை, குழந்தையின்மை போன்றவற்றிக்காக நேர்ந்து கொள்வோம். அது நிறைவேறிய வுடன், காலை முதல் மாலை வரை உணவு அருந்தாமல் வைக்கோலை சுற்றிக்கொண்டு நேர்த்திக் கடன் நிறைவேற்றுகிறோம்’ என்றனர்.