குருநாதரான யாதவப்பிரகாசருக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார் சீடர் ராமானுஜர். அப்போது, ராமானுஜரின் கண்களில் வழிந்த கண்ணீர், கன்னத்தில் வழிந்தோடி குருநாதரின் தோளில் சிந்தியது. நிமிர்ந்து பார்த்த குரு, ராமானுஜா! ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்.நீங்கள் விஷ்ணுவின் கண்ணழகை வர்ணிக்கும், கப்யாஸம் என்ற பதத்திற்கு குரங்கின் ஆசனவாய் போல சிவந்த கண்கள் என பொருள் சொன்னீர்கள். போயும், போயும் இப்படியா சொல்வீர்கள்! அதை எண்ணி மிகுந்த வருத்தப்பட்டு கண்ணீர் சிந்துகிறேன், என்றார் ராமானுஜர்.குருநாதர் அலட்சியத்துடன், ஒரு வார்த்தைக்குரிய பொருளை உள்ளது உள்ளபடி தானே சொல்லமுடியும். உனக்கு வேறு பொருள் தெரிந்தால் சொல்... என்றார்.குருவே! கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று பிரியுங்கள். கபி என்றால் சூரியன், ஆஸம் என்றால் மலர்ந்த என்று பொருள்கள் வரும் . சூரியனால் மலர்வது தாமரை. அதனால், தாமரை போல சிவந்த கண்கள் என்பதே பொருத்தமானது என்றார் ராமானுஜர். ஒரு சொல்லுக்கு பலபொருள் இருந்தால், உயர்ந்த பொருளை எடுத்துக் கொள்வதே உயர்ந்தது.