பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா நேற்று நடந்தது. ஏப்., 1 அன்று, முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் முத்துக்குமார் சுவாமி கோவிலில், நேற்று கொடியேற்று விழா நடந்தது. முன்னதாக, காலை, 5.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, விநாயகர், நவகிரக வேள்வி வழிபாடுகளும், இதனையடுத்து, உதிக்கப்பட்ட தீர்த்த கலசங்களால் முருகப்பெருமான் மற்றும் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 8.00 மணிக்கு கொடியேற்று விழாவும், இதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமார சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் விழாக் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.