கிருஷ்ணரின் தந்தை வசுதேவர், தன் குழந்தையைக் கம்சனிடம் இருந்து காப்பாற்றும் வகையில், ஆயர்பாடியில் உள்ள நந்தகோபர் வீட்டில் விட்டு வந்தார். இதையறிந்த ஆயர்கள், கிருஷ்ணரை தங்கள் தலைவர் வீட்டில் பிறந்த குழந்தையாகக் கருதி, வாத்தியங்கள் இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்தணர்கள் வேத மந்திரங்களை ஓதினர். பசுக்கொட்டில்களிலும், வீதிகளிலும் கோபியர்கள் மாக்கோலம் இட்டனர். மஞ்சள், செஞ்சூரணத்தால் சிலர் சித்திரகோலம் இட்டனர். வாசனை திரவியங்களைப் பூசியும், ஒருவருக்கொருவர் பன்னீர் தெளித்தும் மகிழ்ந்தனர். லட்சுமியின் அம்சமான பசுக்களுக்கு மலர் மாலைகளை சூட்டினர். வீட்டுவாசலில் மலர் அலங்காரம் செய்தனர். பலவிதமான காதணி, கழுத்தணி, முத்துக்கம்மல், அட்டிகைகளை அணிந்து கொண்டு குழந்தையைக் காண நந்தகோபரின் வீட்டுக்குச் சென்றனர். கிருஷ்ணரைக் கண்டு, வசுதேவ் கிருஷ்ணா! எங்களின் அன்புச் செல்வமே! நீ நீடுழி வாழ்ந்து எங்களைக் காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். நந்தகோபரும், யசோதையும் பொன், பொருள், ஆடை, பசுக்கள் என பலவித தானங்களை மக்களுக்கு அளித்து கண்ணனின் வரவைக் கொண்டாடினர்.