பதிவு செய்த நாள்
24
ஆக
2016
02:08
கிருஷ்ணஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவளிக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று அவருக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய், அவல், நாவற்பழம், கொய்யாபழம், விளாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும் வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம்.
அன்று காலையில் இருந்து ஸ்ரீமந் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, மலர்களை அவரது படத்திற்கு தூவ வேண்டும். தூப தீபம் (பத்தி, கற்பூர ஆரத்தி) காட்ட வேண்டும். பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.
பலன்: கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது. கிருஷ்ண ஜென்ம பூமியான மதுரா வாழ் மக்கள், அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து பூஜை செய்வார்கள். யமுனை நதியின் ஒரு கரையில் மதுராவும், மறு கரையில் கோகுலமும் அமைத்துள்ளது. அதனால், அன்று யமுனைக்கு ஆரத்தி காட்டி பூஜை செய்வார்கள்.