பதிவு செய்த நாள்
01
அக்
2016
02:10
1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
4. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
6. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்தபலன் கிடைக்கும்.
7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதாசகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.
8. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.
9. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கிநவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
10. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.
11. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலுவைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.
12. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.
13. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.
14. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.
15. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.
16. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.
17. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
18. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.
19. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.
20. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.
21. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.
22. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.
23. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.
24. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய
அம்சமாகும்.
25. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.
26. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.
27. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.
28. ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.
29. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.
30. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.
31. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.
32. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.
33. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.
34. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.
35. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.
36. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.
37. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.
38. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.
39. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.
40. நவராத்திரி 5-ம் நாளான வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.
41. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
42. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையாப கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.
43. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.
44. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவி யரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.
45. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும்,எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.
46. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.
47. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.
48. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
49. ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.
50. வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி ஸங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை, கண்டா பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, அஷ்டோத்திர நமாவளி, நவதுர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம்.
நல்லன எல்லாம் தரும் நவராத்திரி!
நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மஹா லக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும், பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ - ப்ரஹ்ம ரூபா) அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ - கோவிந்த ரூபிணீ), அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ - ருத்ரரூபா) என்று சொல்கிறது. லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும், ஸரஸ்வதியாகவும் இருக்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்ரத்தில், பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம: என்று வருகிறது. ஸரஸ்வதி அஷ்டோத்ரத்திலும் இப்படியே, பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம: என்று வருகிறது. படைப்பு, அழிப்பு, காப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமாக்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது. துர்கையாக இருக்கிறபோது, வீரம், சக்தி எல்லாம் தருகிறது. மஹாலக்ஷ்மியாகி சம்பத்துக்களைத் தருகிறது. ஸரஸ்வதியாகி ஞானம் தருகிறது.
ஆதிபராசக்தியான துர்க்கையை பொதுவாக, பார்வதியோடு ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். அவள் ஹிமவானின் புத்திரியானதால் மலைமகள். மஹா லக்ஷ்மி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள், ஸரஸ்வதி சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள். பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், க்ஷீரசாகரத்தில் இருந்து பிறந்த மஹாலக்ஷ்மியும், இரண்டு மஹரிஷிகளுக்குப் பெண்களாகவும் அவதரித்திருக்கிறார்கள். மஹாலக்ஷ்மியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தபஸ் செய்தார். அதற்கிணங்கவே லக்ஷ்மிதேவி அவருக்குப் புத்திரியாக உத்பவித்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் அவளுக்கு, பார்கவி என்று பெயர் ஏற்பட்டது. பார்கவி லோக ஜனனி க்ஷீரஸாகர கன்யகா என்று ஸம்ஸ்கிருத அகராதியான அமர கோசம் சொல்லும். இப்படியே, காத்யாயான மகரிஷி சாக்ஷாத் பரமேசுவரியைப் பெண்ணாக அடைய வேண்டும் என்று விரும்பி தபஸ் செய்தார். அம்பிகையும் அவருக்கு மகளாக ஆவிர்பவித்தாள். காத்யாயனருக்குப் பெண் என்பதாலேயே அவளுக்கு, காத்யாயனி என்ற பெயர் உண்டாயிற்று. துர்கைக்கு உரிய காயத்ரியிலே அவளை, காத்யாயனியாக தியானிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறது.
லோக மாதாக்களாக இருக்கப்பட்ட தெய்வங்களைக் குழந்தையாக வரச் சொன்னதில் நிரம்ப விசேஷம் இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்கிறோம். தெய்வமே குழந்தையாக வந்தால், ரொம்பக் கொண்டாட்டமாகும். குழந்தைக்கு நம்மைப் போல் காமமும் குரோதமும் துக்கமும் வேரூன்றி இருப்பதில்லை. இந்த க்ஷணத்தில் ரொம்பவும் ஆசைப்பட்ட ஒரு வஸ்துவை அடுத்த க்ஷணத்தில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறது. கோபமும் இப்படியே சுவடு தெரியாமல் நிமிஷத்தில் மறைந்து போகிறது. அழுகையும் இவ்வாறேதான். நாம்தான் உணர்ச்சிகளை ஆழ உள்ளுக்கு வாங்கிக் கொண்டு மனத்தை கெடுத்துக் கொள்கிறோம். உணர்ச்சிகள் வேரூன்றாமல் குழந்தைகள் போல் நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இதனால்தான் உபநிஷதமும் குழந்தையாய் இரு என்கிறது.
சாக்ஷாத் பராசக்தியைக் காத்யாயனியாகவும், மஹாலக்ஷ்மியை பார்கவியாகவும் குழந்தைகளாக்கி, அந்த பாவத்திலேயே வழிபட்டால், நமக்கும் குழந்தைத்தன்மை சாட்சாத்கரித்துவிடும். இந்த நாளில், வாட்டர்ஃப்ரூப் என்று சொல்வதுபோல், நாம், காம ப்ரூஃப், சோக ப்ரூஃப் எல்லாமாக, சாந்தமாக ஆவோம். குழந்தை ரூபத்தில் இருந்தாலும் ஞானப் பாலூட்டும் மாதாவாக இருக்கிற தேவி, நமக்கு இந்த அநுக்கிரகத்தைச் செய்வாள்.
குழந்தையாக வந்த காத்யாயனியைத் தமிழ் நாட்டுக் கிராம ஜனங்கள்கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் ஊகம். காத்தாயி என்று சொல்கிற கிராம தேவதை காத்யாயனிதான் என்று நினைக்கிறேன்.
பட்டாரிகை என்று பெரிய வித்யோபாஸ்கர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான், நம் கிராம மக்கள் பிடாரி என்று சொல்லிப் பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் பட்டாரிகா மான்யம் என்பதைப் பிடாரிமானியம் என்று திரித்துக் குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம்.
இவ்வாறே கிராம ஜனங்களும்கூட ஸரஸ்வதியை நீண்ட காலமாக வழிபட்டிருக்கிறார்கள். பேச்சாயி, பேச்சாயி என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாக்தேவி ஸரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.
அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜித்து எல்லாச் சக்தியும், சம்பத்தும், நல்ல புத்தியும் பெறுவோம்!