பதிவு செய்த நாள்
19
டிச
2016
02:12
கோவை: கோவையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான, மருதமலை, மாசாணியம்மன், பேரூர், ஈச்சனாரி, காரமடை கோவில்களில், பக்தர்களிடம் அதிக விலைக்கு பிரசாதங்களை விற்பனை செய்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அறநிலையத்துறை இணை கமிஷனர், பிரசாத வினியோகத்தில் குறை ஏதும் வைக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஏழாவது படைவீடாக போற்றப்படும், முருகன் கோவிலில் ஒன்றான, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், விற்பனை செய்யப்படும், முருக்கு அதிரசம், லட்டு, தினைமாவு, பஞ்சாமிர்தம் ஆகியவை, அறநிலையத்துறை நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்தனர். தரமும், எடையும் குறைவாக இருந்தது. இது குறித்து பக்தர்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் முருகேசன், பிரசாதங்களை தயாரித்து விற்பனை செய்யும், எட்டு குத்தகைதாரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்ததுடன். தலா, 2,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
இதே போல் கோவை - பொள்ளாச்சி ரோட்டிலுள்ள, ஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ஆனைமலையிலுள்ள மாசாணியம்மன் கோவில், காரமடை அரங்கநாத சுவாமி கோவில், பேரூர் பட்டீசுவர சுவாமி கோவில்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை சார்பில், இந்து அறநிலையத்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதில், பக்தர்களின் நம்பிக்கையை பாழ்படுத்தும் வகையில், தரமில்லாத பிரசாதத்தை வினியோகம் செய்வதோ, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விலைக்கு விற்பனை செய்வதோ தவறு. நியாயமான விலைக்கு பக்தர்களுக்கு பிரசாதம் கிடைக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அறநிலையத்துறை கோவை மண்டல இணைகமிஷனர் இளம்பருதி, கோவையிலுள்ள கோவில்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், பிரசாத வினியோகத்திலோ, விற்பனையிலோ எந்த குறையும் வைக்க வேண்டாம் என, தெரிவித்துள்ளார்.