அரூர்: பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று அரூர் வர்ணீஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அரூர் வர்ணதீர்த்தத்தில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அரூர் சந்தைமேட்டில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த வழிபாட்டில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.