திருக்கனுார்: திருக்கனுார் சின்ன ஏரிக்கரை கன்னிமார் கோவில் வளாகத்தை போலீசார், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மூலம் துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
திருக்கனுார்– மண்ணாடிப்பட்டு செல்லும் சாலையில், சிவன் கோவில் பின்புறம் சின்ன ஏரிக்கரை அருகே கன்னிமார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் சிலர் மது அருந்தி, காலி பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டு விட்டு செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக திருக்கனுார் போலீசுக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர்கள் நியூட்டன், குமார் தலைமையிலான போலீசார் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், நேற்று கன்னிமார் கோவில் வளாகத்தில் குவிந்திருந்த குப்பைகள், காலி மதுபாட்டில்களை அகற்றி, அப்பகுதியை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். துாய்மைப்படுத்தப்பட்ட பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணிகளிலும் போலீசார் ஈடுபட்டனர். திருக்கனுார் போலீசாரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு, அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.