மாரியம்மன் கோவிலில் சாட்டையடித்து வினோத நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2017 12:04
நாமகிரிப்பேட்டை: சீராப்பள்ளி மாரியம்மன் கோவிலில் சாட்டையடி வாங்கி பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் பண்டிகை கடந்த வாரம் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு பூச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வலம் வந்தனர். பின், பூச்சட்டியில் இருந்த நெருப்பை கோவில் முன் கொட்டியவுடன், பக்தர்கள் அதை திருநீறாக எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர். தொடர்ந்து சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. அருள் வந்த பூசாரி, பக்தர்களை சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறினாலும் அல்லது ஏதாவது ஒரு கோரிக்கையை மனதில் நினைத்துக்கொண்டும் பூசாரி முன் வந்து கையை தூக்கி வரிசையாக நிற்கின்றனர். சாட்டையுடன் நிற்கும் பூசாரி அருள் வந்து பக்தர்களை அடிக்கிறார். ஒவ்வொருவராக வரும் பக்தர்கள் கையை உயர்த்தி நடனமாடிக்கொண்டே சாட்டையடி வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், சட்டையடி வாங்கினால் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், வேண்டுதல் இல்லை என்றாலும் பூசாரி கையால் பக்தர்கள் சாட்டையடி வாங்கிக் கொள்கின்றனர் என்றனர்.