பதிவு செய்த நாள்
13
மே
2017
11:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள்(அழகர்) கோயில், சித்திரைத் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு பெருமாள் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். தொடர்ந்து விடிய, விடிய தசாவதார சேவை நடந்தது. மே 9 ல் அதிகாலை 3:18 மணிக்கு பூப்பல்லக்கில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர், மறுநாள் குதிரை வாகனத்தில் எதிர்சேவையில் அழகருக்கு பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி வரவேற்றனர். நேற்று முன்தினம் காக்காதோப்பு பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் அழகர் புறப்பட்டார். மட்டா மண்டகப்படியில் இரவு 8:00 மணிக்கு, மண்டூக(தவளை உருவம்) மகரிஷிக்கு, துர்வாச முனிவரால் ஏற்பட்ட சாபத்தை நீக்கி விமோசனம் அளித்தார். தொடர்ந்து இரவு 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில், பெருமாள் ஏகாந்த, மச்ச, கூர்ம, வாமன, பரசுராம, ராம, கிருஷ்ண, மோகினி அவதாரத்தில் அருள்பாலித்தார். நேற்று இரவு கருடவாகனத்திலும், இன்று ராஜாங்க திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். நாளை காலை 7:00 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன், மேள, தாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் புஷ்பப்பல்லக்கில் வீதிவலம் வருகிறார். பின்னர் மாலை 5:00 மணிக்கு மேல் கோயிலை அடைந்து, இரவு கண்ணாடி சேவை நடக்கும்.