துார்வாரப்படாத சிவகங்கை குளம்: துர்நாற்றம் வீசுவதால் நோய் அபாயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2017 12:06
சிதம்பரம்: நடராஜர் கோவில் சிவகங்கை குளம் பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் இருப்பதால் தண்ணீர் பாழாகி துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. சிதம்பரத்தில் உள்ள 10 தீர்த்த குளங்களில் முதலாவது தீர்த்தம் சிவகங்கை குளம். இந்த தீர்த்த குளம் காசி தீர்த்தத்திற்கு நிகரானது என கூறப்படுவதால், இந்த குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.
சிவகங்கை குளம் பிரசித்திப் பெற்ற நடராஜர் கோவில் வடக்கு கோபுரம் அருகே உள்ளது. சிதம்பரத்தில் உள்ள தசதீர்த்த குளங்களுக்கு தண்ணீர் செல்ல ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த நீர்வழிப்பாதை தனி நபர் ஆக்கிரமிப்பாலும், நீண்ட காலம் துார் வாரப்படாமல் இருப்பதாலும், துார்ந்து குளங்களுக்கு புதிய தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. விளங்கியம்மன் கோவில் குளம் நிறைந்து, சிவகங்கை குளத்திற்கு தண்ணீர் வரும். சிவகங்கை குளம் நிறைந்து சிவப்பிரியை எனப்படும் தில்லையம்மன் கோவில் குளத்திற்கு தண்ணீர் வரும். இந்த தண்ணீர் பாதை துார்ந்ததால், 10 ஆண்டுகளுக்கும் மேல் புதிய தண்ணீர் குளங்களில் நிரம்புவது இல்லை.
இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் சிதம்பரம் பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. சிவகங்கை குளத்தில் பல ஆண்டுகளாக சேதமடைந்த தண்ணீரும், மழை இல்லாத காரணத்தால் குறைந்த அளவில் இருக்கும் தண்ணீர் கெட்டியாக மாறி பச்சை நிறத்தில் காணப்படுகிறது. தண்ணீர் சேதமடைந்ததால் கடந்த மாதங்களில் குளத்தில் இருந்த மீன்கள் அனைத்தும் இறந்ததால், துர்நாற்றம் வீசியது. தற்போது, மேலும் தண்ணீர் குறைந்து கோவில் வடக்கு பிரகாரம் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நகரில் தொற்று நோய் பரவும் அபாயத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.