பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
03:07
விவேகானந்தரின் சீடரும் பாரதியாரின் குருவும் அயர்லாந்தைச் சேர்ந்தவரும் இந்தியாவை தாய்நாடாகக் கருதித் தொண்டு புரிந்த செம்மல். ஆன்ம உணர்வும் தேசத்தொண்டும் வாழ்வின் இரு கண்களாக கொண்டவர். வீரப் பெண்மணியாக வாழ்ந்த சகோதரி நிவேதிதை. மத போதகர் சாமுவெல் மேரிஇசபெல் தம்பதிக்கு 1867 அக்.28ல் பிறந்தவர் மார்கரெட் எலிசபெத் நோபெல். இதுதான் நிவேதிதையின் நிஜப்பெயர். சுறுசுறுப்பும், ஆவேசமும், விடாமுயற்சியும் மார்கரெட்டுக்கு இயல்பாக வாய்த்தன. இந்தியாவில் மதபோதகராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு நண்பர் சாமுவேலின் வீட்டிற்கு வந்திருந்தார். மார்கரெட்டைப் பார்த்து இவள் இந்தியாவுக்குச் சென்று அந்த மக்களுக்காகப் பாடுபடுவாள் என்றார். திடீரென்று தந்தை இறந்ததும், தாய் மூன்று குழந்தைகளோடு வறுமையை எதிர்த்து வாழ படாத பாடுபட்டார்.
எப்படியோ மார்கரெட் கல்லூரியில் படித்தார். 17ம் வயதில் ஆசிரியர் பணி... பொன்னிறக் கூந்தல், நீலக் கண்கள். புன்முறுவல் பூத்த புதுநெருப்பைப் போலிருப்பார்இளம் வயதிலேயேமதத்தைப் பற்றிய தீவிரமான சிந்தனைகள் அவருக்கிருந்தன. அப்போது நேர்ந்த ஒரு சந்திப்பு தான் அவருடைய வாழ்க்கையின் நோக்கத்தை வடிவமைப்பதாய் இருந்தது. ஆம்... அதுதான் விவேகானந்தரின் தரிசனம்! தன்னுடைய ஆன்மிக ஞானத்தால் அமெரிக்காவைக் கலக்கிவிட்டு, இங்கிலாந்து வந்திருந்த விவேகானந்தரை மார்கரெட்டின் தோழி தன் வீட்டுக்கு அழைத்திருந்த போது தான் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. விவேகானந்தரின் தோற்றமும் பேச்சும் அவரைக் கவர்ந்தாலும், மார்கரெட்டுக்குஅவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தன.விவேகானந்தர் மீண்டும் இங்கிலாந்து வந்து சில மாதங்கள் தங்கியிருந்தபோது, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கவனித்தார். ஒருநாள் விவேகானந்தர் மார்கரெட்டிடம் நான் இந்தியப்பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காகச் சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். அதில் நீ எனக்குஉதவ முடியும் என்று நம்புகிறேன் என்றார்.
அதையே அழைப்பாக ஏற்றது அந்த அயர்லாந்து நெருப்பு. தன்னோடு ஒரு பெண் இருப்பதை ஆங்கிலேயர்களும் இந்தியர்களும் எப்படி ஏற்பார்கள்... தன்னால் அவள் மீது சந்தேகம் கொள்வார்களே என்றெல்லாம் சிந்தித்தார். ஆனால் மார்கரெட் எதையும் பொருட்படுத்தவில்லை. 1898 ஜன.28ல் கல்கத்தா துறைமுகத்தில் வந்திறங்கிய அவரை நேரில் வரவேற்றார்! அப்போது இந்தியாவில் மார்கரெட்டுக்குத் தெரிந்திருந்த ஒரே நபர் விவேகானந்தர் தான். அவரது இரண்டு அமெரிக்கப் பெண் சீடர்களும் மார்கரெட்டுக்குத் தோழியரானார்கள். மார்ச்11ல் ஒரு பொதுக்கூட்டத்தில் நம்முடைய பணிக்காக இங்கிலாந்து தந்த கொடை, என்றுஅவரை அறிமுகம் செய்தார் சுவாமி.
பின் அன்னை சாரதாதேவியாரைச் சந்தித்த மார்ச் 17ம் தேதியை, வாழ்வில் பொன்னாள் என்று குறிப்பிடுகிறார். மார்ச் 25ல், மார்கரெட்டுக்கு நிவேதிதா என்னும் பெயரை விவேகானந்தர் சூட்டினார். இந்தியாவின் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார். காஷ்மீரும், அல்மோராவும் சகோதரியைப் பெரிதும் கவர்ந்தன. சென்ற இடங்களிலெல்லாம் அந்தந்த இடத்தைப் பற்றிய வரலாறு, கலை, ஆன்மிகம் தொடர்பான விபரங்களை விவேகானந்தர் கூறினார். இருவரும் அமர்நாத் சென்று பனிவடிவ சிவனைத் தரிசித்தனர். அன்னை சாரதாவுடன் சில நாட்கள் ஏழைகளோடு ஏழையாகத் தங்கியிருந்ததைப் பொக்கிஷமாகக் கருதினார் சகோதரி. பெண் குழந்தைகளுக்காக அவர் கட்டிய ஒரு பள்ளியை அன்னை திறந்து வைத்தார். பெற்றோர்களுக்காகவும் ஒரு சிறு பள்ளியைத் துவக்கினார். அன்னை அவரை என் செல்ல மகளே! என்றே அழைத்தார்! அன்னையுடன் பழகுவதற்காக வங்க மொழியைக் கற்றார் நிவேதிதை. ஆங்கிலத்தில் சில நூல்களை எழுதியுள்ளார்.
சுவாமியுடன் அமெரிக்கப் பயணம் சென்றார். அங்கே சொற்பொழிவுகள் ஆற்றினார். கப்பல் பயணத்தில் சுவாமியுடன் நிறையப் பேசவும் கற்றுக்கொள்ளவும் அவரை கவனிக்கவும் வாய்ப்பு இருந்தது. சுவாமியுடன் சகோதரிக்கு நிறையவே கருத்து வேறுபாடுகள் இருந்தன. தீவிரமாக விவாதம் செய்வார். ஆன்மிகத்தை விட்டுச் சென்றுவிடலாமா என நினைத்தார். ஆனால் தியானம் பழகப் பழக, சுவாமி சொல்லியவை சரி என புரிந்து கொண்டார். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை எப்படி பாழ்படுத்தியுள்ளனர் என்பதையும், சுவாமி ஆராதித்தது இந்த தேசம் என்னும் தெய்வத்தையே! என்பதையும் தெரிந்து கொண்டார். முந்தைய நாள் தனக்கு உணவளித்து, கையையும் கழுவிவிட்ட சுவாமி மறைந்துவிட்டார் என்னும் சேதி அவரை இடியாய்த் தாக்கியது. ஆனால் சுவாமியின் நேரடி சீடரான அவர், வீரமிக்க தேச பக்தையாக தடைசெய்யப்பட்ட வந்தேமாதரம் முழக்கத்தோடு எழுந்தார். பழுத்த தேசபக்தர்களான விபின் சந்திர பாலர், அரவிந்தர், திலகர், கோகலே, சுரேந்திரநாத் தத்தா, பானர்ஜி, காந்தி, ராஷ்பிகாரி கோஷ் மற்றும் தாகூர், ஜகதீஷ் சந்திர போஸ் போன்றோர் சகோதரியைச் சந்தித்தனர்; வானளாவப் புகழ்ந்தனர். பாரதமே தனது தாய் நாடென்றும் அதன் விடுதலைக்காகவும்,ஏழை மக்களின் ஏற்றத்துக்காகவும் பாடுபடுவேன் என்று பகிரங்கமாக அறிவித்த சகோதரியின் தேசபக்தி கண்டு ஆங்கில அரசாங்கம் திகைத்தது. விடுதலைப் போரில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு உந்து சக்தியாகவும் ஏன் புகலிடமாகவும் இந்த மேல்நாட்டுப் பெண்மணி விளங்கினார்.
தன் 23ம் வயதில் பாரதியார் அவரைச் சந்தித்தபோது, சகோதரிக்கு 39 வயது. குருமணி என்று அவரைப் புகழ்ந்த மகாகவி பல இடங்களில் அவருடைய புகழைப் பாடுகிறார். தன்னுடைய சுதேச கீதங்கள் நூலை அவருக்கு அர்ப்பணம் செய்தார்.அவரைச் சந்தித்தபின் பாரதியின் தேசபக்திக் கனல் இன்னும் கொழுந்து விட்டெரிந்தது. பெண் விடுதலையை நோக்கி அவருடைய கண் திறந்தது.
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்கு பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும்பொருளாய் புன்மைத் தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன் என்று பாடினார். கடுமையான தவப்பயிற்சியாலும் நாட்டுக்காக ஓய்வின்றி உழைத்ததாலும் தளர்ந்து போயிருந்த அவர் மலேரியாவால் தாக்கப்பட்டார். அதன்பிறகு அவர் உடல்நிலை தேறவே இல்லை. தனது முடிவைஇரண்டாண்டுகளுக்கு முன்பே அறிந்து கொண்டிருந்தார். எனவே இனி கல்கத்தா திரும்பிவர மாட்டேன் என்று தெரிந்தவர்களிடம் சொல்லி விட்டு டார்ஜிலிங் சென்றார். அவருடைய உடல்நலம் மேலும் சீர்குலைந்தபோதும் கலகலவென்றே இருந்தார். படகு இனிமேல் பயணத்திற்குத் தோதில்லை என்றாலும் சூரிய உதயத்தை ரசிக்க முடிகிறது என்று கவித்துவமான வார்த்தைகளைப் பேசி, அவருக்கு மிகவும் பிடித்த பிரார்த்தனையான “மரணத்திலிருந்து மரணமிலாப் பெருவாழ்வுக்கு அழைத்துச் செல்வாயாக என்னும் வரிகளைப் பாடியபடியே கண்மூடினார். அவர் மறைந்த நாள் 1911 அக்.13. அந்த நெருப்பை எரிக்க முடியாமல் திணறியது அக்னி.
ஆங்கிலேய நாட்டிலிருந்து ஆன்மிகக் கனவுகளோடு வந்து, இந்தியாவே தனது தாய்நாடு என்று முழங்கி, தேசமே தெய்வம் என்று எழுந்த விந்தைப் பெண்மணி சகோதரி நிவேதிதை.