மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் ஆடித்தபசு திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2017 03:08
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா நிறைவடைந்தது.கடந்த 10 நாள்களுக்கு முன்பு தொடங்கிய இந்த விழா நாள்களின்போது இரவு ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி, வீதிவுலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு விழாவிற்காக அம்மன் எலுமிச்சை மாலை அணிந்து தபசு கோலத்தில் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிக்கு எழுந்தருளினார். அம்மனின் தபசு கோலத்தை முடித்து வைக்கும் விதமாக, சோமநாதசுவாமி பிரியாவிடையுடன் விருஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பட்டு வந்தார். பின்னர் தபசு கோலத்தில் இருந்த ஆனந்தவல்லி அம்மன், சுவாமியை மூன்று முறை வலம் வந்தார். தொடர்ந்து சுவாமி விருஷாபரூடராக காட்சி தந்து ஆனந்தவல்லி அம்மனின் தபசு கோலத்தை முடித்து வைத்தார். பின்னர் அம்மனும்,சுவாமியும் மாலைமாற்றி கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தபசு கோலத்தை கலைத்து கால்பிரவு கிராமத்தார்கள் மண்டகப்படியில் அம்மனும்,சுவாமியும் விருஷப வாகனங்களில் எழுந்தருளினர். ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானீகம் தெய்வசிகாமணி,குமார்,சோமாஸ்கந்தர் ஆகியோர் செய்து இருந்தனர். சனிக்கிழமை சுவாமிகளுக்கு சந்தனக்காப்பு உற்சவத்துடன் இந்தாண்டு ஆடித்தபசு திருவிழா நிறைவடைந்தது.