திருச்சூர் பூரம் விழாவில் வாணவேடிக்கை ரத்து; வெடி விபத்தால் தேவஸ்வம் திடீர் முடிவு
பதிவு செய்த நாள்
24
ஏப் 2026 11:04
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் . பூரம் திருவிழாவுக்காக வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி, 14 பேர் உயிர் இழந்ததால், இம்முடிவு எடுக்கப்பட்டது. கேரளாவின் திருச்சூரில் நாளை மறுநாள் உலக பிரசித்தி பெற்ற பூரம் திருவிழா நடக்கிறது. யானைகள் அணிவகுப்புடன், இரவில் நடக்கும் வாணவேடிக்கை நிகழ்ச்சி காண்போரை பிரமிப்பூட்டும். இந்த ஆண்டு வாணவேடிக்கை நிகழ்ச்சிக்காக திருச்சூர் அருகே முண்டத்திக்கோடு என்ற பகுதியில் உள்ள குடோனில் பட்டாசுகள் மொத்தமாக சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென இந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில், 14 பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. திருவிழா நெருங்கிய சமயத்தில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் பக்தர்களையும், கோவில் நிர்வாகத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு திருவிழாவை எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, திருச்சூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திருவிழாவை நடத்தும் திருவம்பாடி மற்றும் பரமேக்காவு தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், துயர சம்பவம் நிகழ்ந்ததால், இந்த ஆண்டு பூரம் திருவிழாவை அடிப்படை சடங்குகளுடன் நடத்தி முடிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, யானைகளின் மீது அமர்ந்து, வண்ணக் குடைகளை மாற்றும், குடை மாற்றும் நிகழ்ச்சிக்கான பிரமாண்டம் இந்த முறை குறைக்கப்பட்டுள்ளது. அதே போல், இரவின் இருளை கிழிக்கும், வண்ண, வண்ண வாணவேடிக்கை நிகழ்ச்சியும் முழுதாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்வம் நிர்வாகிகளின் இம்முடிவால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: திருச்சூர் பூரம் திருவிழாவுக்காக அளவுக்கு அதிகமான பட்டாசுகளை குடோனில் சேகரித்து வைத்ததாக, பட்டாசு தயாரிப்பு ஆலையின் உரிமையாளர் பினோய் ஜேக்கப் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் இந்நடவடிக்கைக்கு பரமேக்காவு தேவஸ்வம் செயலர் ராஜேஷ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். திருச்சூர் பூரம் திருவிழாவை சீர்குலைக்கும் நோக்கில், யாரோ சிலர் சதி செய்வதாகவும் அவர் குற்றஞ் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பூரம் திருவிழாவுக்கு 6,000 கிலோ அளவுக்கு வெடிப்பொருட்களும், பட்டாசுகளும் தேவைப்படும். இதன் காரணமாகவே, பட்டாசு வெடிப் பொருட்களை உரிமையாளர் கூடுதலாக சேகரித்து வைத்திருந்தார். அதை காரணமாக வைத்து உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ததை ஏற்க முடியாது, என்றார்.
|