மகாவிஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டம் அல்லது பரமபதத்தில், அவரோடு கலந்த ஜீவன் முக்தர்களை நித்யசூரிகள் என்பர். இவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிப்பதோடு, அவரின் தெய்வீகப் பெருமைகளையும் பாடிக் கொண்டிருப்பர். பசி, தூக்கம், சுகம், துக்கம் போன்ற எவ்விதமான உணர்வுகளும் இவர்களிடம் இருக்காது. இங்கு செல்வோரை கடல் அலைகள் கையெடுத்து வணங்கும். மேகங்கள் முழங்கி வாழ்த்து சொல்லும். தேவர்கள் வரவேற்று மகிழ்வர் என்று நம்மாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிட்டுள்ளார். வைகுண்டத்திற்கு தெளிவிசும்பு திருநாடு என்ற பெயர் உண்டு. இதற்கு பிரபஞ்ச படைப்பைப் பற்றிய தெளிவைத் தரும் இடம் என்று பொருள். நம்மாழ்வார் பத்து பாசுரங்களில் இதனைப் பாடியுள்ளார்.