பதிவு செய்த நாள்
13
செப்
2017
12:09
ஆத்தூர்: கல்வராயன் மலையில், சோழர் கால காட்டு பன்றி குத்தி பட்டான் சதிகல், புதிய கற்கால கருவி, கற்திட்டை மற்றும் குத்து கற்களை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆறகளூர் பொன்.வெங்கடேசன், பெருமாள் கலைச்செல்வன் உள்ளிட்ட குழுவினர், கடந்த, 2ல், ஆத்தூர் அருகே, கல்வராயன்மலைப்பகுதியில், அருணா, அத்திரிப்பட்டி ஆகிய மலைக்கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது: அருணா மலையில், சோழர் கால காட்டு பன்றி குத்திபட்டான் சதிகல் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. கணவர் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறும் வழக்கம், பழங்காலத்தில் இருந்தது. விவசாய பயிர்களை காப்பாற்றவும், விளைந்த பயிர்களை நாசம் செய்து வந்த காட்டு பன்றிகள் கூட்டத்தை, ஒரு வீரன் வேட்டையாடும்போது, அந்த காட்டு பன்றிகளை கொன்று தானும் இறந்துள்ளான். அவன் மனைவியும் அவனுடனே உடன் கட்டை ஏறி இறந்துள்ளார். அவர்களுக்காக, சதிகல் வைக்கப்பட்டுள்ளது. இது சோழர் காலத்தை சேர்ந்த நடுகல். வீரன் நீண்ட வில்லுடன் காட்டு பன்றி மீது அம்பை விடுவது போலவும், காதணி இல்லாத நீண்ட காதுகள், கழுத்தில் மணியால் ஆன ஆபரணம் உள்ளது. குறுவாளுடன் கூடிய ஆடை, கையில் வளையம், கீழ்நோக்கி பாயும் நிலையில் அம்பு உள்ளது. ஆணுக்கு காட்டப்பட்ட அதே தலை அலங்காரத்துடன் காதணி அணிந்த பெண் மேலாடையின்றி, இடையில் அரை ஆடையுடன், உயரம் குறைந்த நிலையில் பெண் காட்டப்பட்டுள்ளார். ஒரு கை மடக்கியும், மற்றொரு கை தொங்க விடப்பட்டும், கால் மற்றும் கைகளில் வளையம் உள்ளது. இவர்களின் அருகே, காட்டு பன்றி ஒன்று முதுகில் அம்பு பாய்ந்த நிலையில் வீரனை தாக்க முயற்சிப்பது போல் உள்ளது. மூன்று பன்றிகள் இறந்த நிலையில் உள்ளன. கூட்டமாக வந்த காட்டு பன்றிகளை வேட்டையாடிய வீரன், அவற்றை கொன்று தானும் இறந்துள்ளான். அத்திரிப்பட்டி விநாயகர் கோவிலில், 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, 70க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள், பல்வேறு வடிவங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இவை, விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தியுள்ளனர். அதன் மூலம், இப்பகுதியில், 6,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது. மேலும் ஊர் அருகே உள்ள நாட்டம்பாறையில், ஐந்து கற்திட்டைகள் உள்ளன. 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள், தன் குழுவில் இறந்த முக்கியமான தலைவர்களுக்கு, இதுபோன்ற கற்திட்டை அமைத்து வழிபட்டு வந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்..