ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நகை காணாமல் போனது குறித்து உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டதால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கம், வைர நகைகளை ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் கட்டிய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவூலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் தங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த நகைகளில் சிலவற்றை காணவில்லை என ராமேஸ்வரம் பக்ஷி சிவராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு விளக்கம் அளிக்கும்படி இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி நேற்று, ராமேஸ்வரம் கோயில் கருவூலத்தில் இணை ஆணையர் மங்கையர்கரசி தலைமையில், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் தங்கம், வைர நகைகளை ஆய்வு செய்து,கணக்கெடுத்தனர். கோயிலில் தங்க நகைகள், வைரங்கள் கணக்கெடுக்கும் பணி வழக்கமானது தான். நகைகள் ஆய்வறிக்கையை இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்ப உள்ளதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.