ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2025 10:11
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.
ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்யும்போது அர்த்தநாரீஸ்வரராக ஒளி வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமண தடை, பேச்சில் குறைபாடு மற்றும் குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு புண்ணிய ஸ்தலமாக இக்கோவில் உள்ளது. புனரமைக்கப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி திஷா, சாந்தி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தன. நேற்று அக்னி சங்கிரஹணம், தீர்த்த சங்கிரஹணம், புண்ணியாக வஜனம் உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை சிவாச்சாரியார்கள் நாகராஜ், சோமு குருக்கள் தலைமையில் துவங்கியது. தொடர்ந்து இன்று வேதமந்திரங்கள் ஓத யாகசாலை பூஜைகள் நடக்கிறது. நாளை 27ம் தேதி, காலை 9:30 மணியளவில் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான முன்னேற்பாடுகளை ஊர்பொதுமக்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.