ஸ்வாமி நாராயண அக்ஷர்தாம், டெல்லி மற்றும் குஜராத் காந்தி நகரில் அமைந்துள்ளது. இந்த இரு இடங்களுக்கும் தீபாவளியின்போது கூட்டம் அலை மோதுகிறது..! ஏன்? டெல்லி அக்ஷர்தாம், கலை, கல்வி மற்றும் கேள்வி ஆகியவற்றின் கண்காட்சிப் பெட்டகம்! இது 1781 - 1830 -ம் ஆண்டுகளுக்கு இடையே வாழ்ந்த மகான் ஸ்ரீஸ்வாமி நாராயணனுக்கு ஓர் ஆன்மீக அர்ப்பணிப்பு... டெல்லி அக்ஷர்தாம் நூறு ஏக்கரில் அமைந்துள்ளது. இங்குள்ள கோயில் செம்பளிங்கும், வெண்பளிங்கும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
234 தூண்கள், 9 பிரம்மாண்டமான விமானங்கள், 20 நாற்கோண கோபுரங்கள்... 20,000க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இந்த அக்ஷர்தாம், இரும்பு உலோகத்தைப் பயன்படுத்தாமலே கட்டப்பட்டுள்ளது. உள்ளே மூல மூர்த்தி பகவான் ஸ்ரீஸ்வாமி நாராயணன். இவர் பதினாறு அடி உயரம் கொண்டவர். உள்ளே ராமச்சந்திரன் - சீதாஜி, கிருஷ்ணா - ராதாஜி மற்றும் மகாதேவ் - பார்வதிஜி ஆகியோரின் பளிங்குச் சிலைகளையும் காணலாம்! இதேபோல் குஜராத் காந்தி நகரில் உள்ள அக்ஷர்தாம் கோயிலிலும் தீபாவளியன்று, எண்ணெய் தீபங்கள் ஏற்றப்பட்டு மின்விளக்குகள் அணைக்கப்படும். இந்த அற்புத தரிசனத்தை ரசிக்க ஏராளமானோர் கூடுவர். இங்கு நடக்கும் - அன்ன கூட் ரொம்ப விசேஷம்.... 56 பதார்த்தங்கள் வைக்க வேண்டும். ஆனால் ஏராளமான பதார்த்தங்கள், வரிசை வரிசையாக ஸ்வாமி. நாராயண முன் வைக்கப்பட்டு நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுவது காணப்படவேண்டியது காட்சி.