பதிவு செய்த நாள்
05
டிச
2018
01:12
காஞ்சிபுரம் மாவட்டம் வந்தவாசிக்கு அருகிலுள்ள சவுந்தர்யபுரத்தில் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. திருமகளின் பரிபூரண அருட்கடாட்சத்தை அள்ளித்தரும் பத்ம சக்கரம் இத்தலத்தின் விசேஷ அம்சமாகும். காண்பதற்கரிய பத்மசக்கர ரூபிணியாய் அம்புஜவல்லி தாயார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். மத்தியில் மேருபர்வதத்தைக் குறிக்கும் வகையில் ஒரு கர்ணிகையும் அதையொட்டி இருவளையங்களும் திகழ, அதைச் சுற்றி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் அஷ்டலக்ஷ்மிகளான ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, தனலட்சுமி, வித்யாலட்சுமி, விஜயலெட்சுமி ஆகியோர் நித்யவாசம் புரிகின்றனர். அவர்களின் நடுவில் அன்னை அம்புஜவல்லி தாயார் அருள்புரிகிறார். ஸ்ரக்தரா விருத்தத்தைக் குறிக்கும் வகையில் 44 இதழ்களைக் கொண்ட இச்சக்கரம் 4 வேதங்களுக்கு சமமாக நாற்புறமும் 4 தீ ஜ்வாலைகளையும் அத்தீ ஜ்வாலைகளில் லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர், வராஹர், கிருஷ்ணர் ஆகியோரையும் கொண்டு திகழ்கிறது. பத்ம சக்கரத்தை சேவிப்பதால் மகாலட்சுமியின் பரிபூரண அருள், அஷ்ட ஐஸ்வர்யங்கள், சந்தானப்ராப்தி, தன தான்ய அபிவிருத்தி, வித்யா அபிவிருத்தி, வியாபார ஏற்றங்கள் அனைத்தும் கிட்டும். கடன் தொல்லை, திருமணத்தடை அகலும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பத்ம சக்கரத்துக்கு பாலபிஷேகமும், அன்னதானமும் நடைபெறுகிறது.