கள்ளக்குறிச்சி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வடசென்னிமலை முருகன் கோவிலுக்கு கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கட்டளைதாரர்கள் அலகு குத்தி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். ஆத்துார் அடுத்த வடசென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர 4ம் நாள் உற்சவத்தினை பாரம்பரியமாக கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டைச் சேர்ந்த நாடார் சமூகத்தினர் செய்து வருகின்றனர். கோட்டைமேடு பாலமுருகன் கோவிலில் இருந்து ஊர்வலமாக அண்ணா நகர் விநாயகர் கோவில் வரை 25 அடி அலகினை குத்தியும், பால்குடம் ஏந்தியும், தேர் வடம் பிடித்து இழுத்தும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரையாக சென்றனர்.