மதுரை ; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக நிகழ்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாலை கோவில் வளாகத்தில் மூலவர் மகாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக நிறைவு நிகழ்வாக பஞ்சமூர்த்திகள் வீதி உலா மற்றும் ஆச்சாரிய எஜமான உற்சவம் நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வீதி உலா வந்தனர். மாசி வீதிகளில் கைலாய வாத்தியங்கள் முழங்க, சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். வீதி உலா சென்ற பஞ்சமூர்த்திகளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதல் படை வீடான திருப்பரங்குன்றம் புறப்பட்டுச் செல்லும் விடைபெறும் நிகழ்வும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வுகளை காணவும், சுவாமி தரிசனம் செய்யவும் மாலை நேரத்தில் பக்தர்கள் திரளாக குவிந்தனர்.