மதுரை மீனாட்சி கும்பாபிஷேகத்தில் நடந்த சிவனின் திருவிளையாடல்: பக்தர்கள் நெகிழ்ச்சி



 மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரவசமடைந்தனர். கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று முதல் அக்., 2 வரை மண்டல பூஜை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடியும் வரை வெயிலை காணவில்லை. ‘இதுவும் சிவபெருமானின் திருவிளையாடல்’ என பக்தர்களும், பட்டர்களும் உணர்ச்சி வசப்பட்டனர்.


இன்று முதல் மண்டல பூஜை: கும்பாபிஷேகத்திற்கு பிறகு 48 நாட்களுக்கு(நவ.,3 வரை) மண்டல பூஜை நடக்கும். ஆனால் மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று(செப்.,18) துவங்கி அக்.,2 வரை மட்டுமே நடக்கிறது. மாதந்தோறும் திருவிழா இருப்பதால் அடுத்த மாத திருவிழாவை கணக்கிட்டு மண்டல பூஜை நடத்தப்படுவது இக்கோயில் வழக்கம். அதன்படி அடுத்த மாதம் 11ம் தேதி நவராத்திரி உற்ஸவம் துவங்குவதை முன்னிட்டு அதற்குள்ளாகவே மண்டல பூஜை நடத்தப்படுகிறது.


* ‘த.வெ.க., அரசு தலைமையிலான கூட்டணி அரசு நடத்திய முதல் கும்பாபிஷேகம்’ என அமைச்சர் விஸ்வநாதன் பெருமிதமாக கூறினார்.


* பாதுகாப்பு பணியில் இருந்த 3 போலீசார் உட்பட 6 பேர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


* மதுரை சேதுபதி பள்ளியிலும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு விருந்தும், அன்னதானமும் வழங்கப்பட்டது.


* கூட்டத்தை பயன்படுத்தி திருட முயன்ற வடமாநில பெண்கள் மூவரை போலீசார் ‘ஏ.ஐ.,’ தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து கைது செய்தனர்.


* கேரளத்தில் இருந்து வந்த விஜயலட்சுமியின் 62, இரண்டரை பவுன் நகை திருடுபோனது.


* கூட்டத்தில் காணாமல் போன 7 வயது சிறுவனை, சி.சி.டி.வி., காட்சிகளை வைத்து, போலீசார் 2 மணி நேரத்தில் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.


* கும்பாபிேஷகத்தை முன்னிட்டு தினமும் கோயில் பகுதியில் 24 மணி நேரமும் துாய்மை பணியில் துாய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்