பதிவு செய்த நாள்
30
செப்
2020
12:09
தி.மலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் கொடிமரத்தின் அருகிலுள்ள, அதிகார நந்தி, சுவாமி கருவறை எதிரில் உள்ள நந்தியம் பெருமான், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் உள்ள பெரிய நந்தி உள்ளிட்டவற்றிற்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், பால், பன்னீர், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, சந்தனம், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பிரதோஷ வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை.
* தர்மபுரி, நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள நந்திக்கு, நேற்று மாலை, பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில், பாலக்கோடு பால்வன்னநாதர் கோவில், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே வர்ணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் உள்பட, மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.