நாகர்கோவில் : கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.
நவராத்திரி விழாவில் தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். பாரம்பரிய வழக்கப்படி பத்தாம் நாள் விழாவில் அம்மன் வெள்ளிக்குதிரை மீது காலையில் புறப்பட்டு 3 கி.மீ., தொலைவில் உள்ள பஞ்சலிங்கபுரத்தில் பாணாசுரன் என்ற அரக்கனை வதம் செய்து விட்டு நள்ளிரவில் கோயில் திரும்புவார். ஆனால் கொரோனா காரணமாக கோயில் வளாகத்திலேயே பரிவேட்டையை முடிக்க தேவசம்போர்டு முடிவு செய்தது. இதை எதிர்து அரசியல் கட்சிகள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டது. நாகர்கோவில் ஆர்.டி.ஓ. மயில் தலைமையில் பக்தர்கள் சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் மாலையில் பரிவேட்டை ஊர்வலத்தை தொடங்கி குறுகிய நேரத்தில் முடிக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி நேற்று மாலை 4:00 மணிக்கு தேவி வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்சலிங்கபுரத்துக்கு புறப்படுதல் நடந்தது. கோயிலின் வெளியே போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். 6:30 மணிக்கு பஞ்சலிங்கபுரம் வந்த அம்மன் 6:45 மணிக்கு பாணாசுவரனை வதம் செய்து பரிவேட்டையை முடித்தார். பின்னர் கோயிலுக்கு அம்மன் புறப்பட்டார்.அம்மனுக்கு இன்று அதிகாலை முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடத்த பின்னர் மூலஸ்தானத்துக்கு எழுந்தருளினார்.கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும் ஏராளமான பக்தர்கள் பஞ்சலிங்கபுரத்தில் திரண்டிருந்தனர்.