மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு வைகை நீர் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2020 01:12
மதுரை : மதுரை வைகை ஆற்றில் இருந்து நேற்று அதிகாலை முதல் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு நீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 15 கன அடி வீதம் நீர் செல்கிறது.
இத்தெப்பக்குளத்திற்கு வைகை நீரை திருப்பி விட துார்ந்திருந்த பனையூர் கால்வாய் 2019ல் சீரமைக்கப்பட்டது. இக்கால்வாய்க்கும் வைகைக்கும் இடையே துண்டிக்கப்பட்ட இடம் மீண்டும் இணைக்கப்பட்டது. அந்தாண்டு இறுதியில் ஏ.வி., பாலம் தடுப்பணையில் இருந்து இக்கால்வாய் வழியாக தெப்பத்திற்கு வைகை நீர் திறக்கப்பட்டது. 40 ஆண்டுக்குப் பின் வைகை நீர் மூலம் தெப்பம் நிரம்பி கடலாக காட்சியளித்தது. பின் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நீர் திறக்கப்படுகிறது. சில வாரங்களாக பெய்யும் மழையில் கண்மாய்கள் நிரம்பி உபரி நீர் வைகையில் பாய்கிறது. மழை வெள்ளமும் வருவதால் ஆற்றில் நீர்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏ.வி., பாலம் தடுப்பணையில் இருந்து பனையூர் கால்வாய் மூலம் தெப்பக்குளத்திற்கு நேற்று முன்தினம் நீர் திறக்கப்பட்டுள்ளது. கால்வாய் கழிவுகளை இந்நீர் அடித்துச் சென்றது. அசுத்த நீரை தெப்பத்திற்கு விடாமல் தொடர்ந்து பனையூர் கால்வாயில் விட்டனர். நேற்று அதிகாலையில் நீர் தெளிந்த பின் தெப்பக்குளத்திற்குள் விட்டனர். தெப்பம் மேற்கிலுள்ள 3 துவாரங்கள் வழியாக நீர் பாய்கிறது. மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், வைகையில் நீர்வரத்து தொடர்ந்தால் இருவாரங்களில் தெப்பக்குளம் நிரம்பும், என்றார்.