பதிவு செய்த நாள்
09
ஜூன்
2021
04:06
சென்னை:கோவில்களில் சம்பளம் இல்லாத பணியாளர்களுக்கு வழங்குவதை போல, கிராம கோவில் பூசாரிகளுக்கும், அரசு நிவாரணத் தொகை, தொகுப்பு பொருட்கள் வழங்க வேண்டும் என, கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பேரவை நிறுவனர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர், முதல்வர், அறநிலையத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம்:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார், பூசாரிகள் தினமும் கோவிலுக்கு சென்று, நித்ய பூஜைகளை செய்து வருகின்றனர்.
பக்தர்கள் தரும் தட்சணைகள் இல்லாவிட்டாலும், தெய்வ சேவையாற்றி வருகின்றனர். சம்பளம் பெறாத கோவில் பணியாளர்களுக்கு, 4,000 ரூபாய் உதவித் தொகையும், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக, முதல்வருக்கு நன்றி. எனினும், அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அமையாத, ஆயிரக்கணக்கான கிராமக் கோவில் பூசாரிகளின் ஏழ்மை நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களுக்கும் கோவிலை தவிர வேறு வாழ்வாதாரம் கிடையாது. தட்டில் பக்தர்கள் கொடுக்கும் சொற்ப தொகையில் வாழ்க்கை நடத்தி வரும் பூசாரிகள், ஊரடங்கால் குடும்பம் நடத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே, தற்போது ஊரடங்கால் குடும்பம் நடத்தவே போராடி வரும், கிராமக்கோவில் பூசாரிகள் அனைவருக்கும், கோவில்களில் சம்பளம் இல்லா பணியாளர்களுக்கு வழங்குவதை போல, 4,000 ரூபாய், அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.