தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கிராம கோவில் பூசாரிகளுக்கு நிவாரணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2021 06:06
தஞ்சாவூர், தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூலம் தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ளிட்ட 2,500 கிராமக் கோயில் பூசாரிகள் மற்றும் பூ கட்டும் ஏழைத் தாய்மார்கள் 800 குடும்பங்களுக்கு என மொத்தம் 3, 300 குடும்பங்களுக்கு 38 லட்சம் மதிப்பிலான நிவாரண மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கலந்துகொண்டு முதற்கட்டமாக தஞ்சாவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 66 கிராம கோவில் பூசாரிகள், 13 பூ கட்டும் ஏழைத் தாய்மார்கள் ஆகியோருக்கு மளிகைப் பொருட்களை வழங்கினார்.
அப்போது, பொன்மாணிக்கவேல் பேசுகையில், நமது முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வந்த கடவுளைத் தொட்டு பூஜிக்ககவாய்ப்பைப் பெற்ற பூசாரிகள் மிகவும் போற்ற தகுந்தவர்கள். மிகக் குறைந்த சம்பளத்தில் இத்தகைய பணியில் தொடர்ந்து ஈடுபடும் கிராமக் கோவில் பூசாரிகள் நிலையை உணர்ந்து அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் மதிப்பிலான மளிகை சாமான்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூலம் வழங்கப்படுவதபாராட்டுக்குரியது.
ஒவ்வொருவரும் இறைவனிடம் முழுமனதோடு பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்த வேண்டியது அவசியம். அது மிகுந்த பலனைத் தரும். இதற்கு ஒரு வாய்ப்பாக வரும் பௌர்ணமி அன்று (24-ம் தேதி 10:30 மணி முதல் 11.30 மணி வரை) தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரம் கோயில்களில் ஒரே நேரத்தில் உலக நலன் வேண்டியும், கொரோனா தோற்று நீங்க வேண்டியும் சிறப்பு கூட்டு வழிபாடு நடத்துவதில் அனைவரும் பங்கேற்று பயன் பெற வேண்டும். நன்மைகள் விரைவில் நடக்கட்டும்; நோய்கள் அதிவிரைவில் நீங்கட்டும் என்ற உணர்வோடு ராமகிருஷ்ண மடத்தின் இத்தகைய உன்னதமான பணி நமது பண்பாடு கலாச்சாரத்தின் ஆணிவேராக உள்ள கிராம கோவில்களை மீண்டும் புத்துணர்வு செய்யும் என்பதில் ஐயமில்லை என்றார். இதில் தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பொறுப்பாளர் சுவாமி விமூர்த்தானந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.