சபரிமலையில் பிரசாதத்துக்கு புக்கிங் செய்தால் நேரம் மிச்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2021 10:11
சபரிமலை: சபரிமலை தரிசனத்துக்கான முன்பதிவு எண்ணிக்கை நேற்று மாலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது. பக்தர்கள் பிரசாதத்துக்கு முன்பதிவுசெய்தால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். மண்டல கால சீசன் தொடக்கத்தில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வீதம் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில நாட்களை தவிர்த்து மீதமுள்ள அனைத்து நாட்களிலும் முன்பதிவு முடிந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இது 45 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. டிச., ஜனவரியில் பெரும்பாலான நாட்கள் சில மணி நேரத்திலேயே முன்பதிவு முடிந்து விட்டது.
இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் அனைத்து நாட்களுக்கும் முன்பதிவு அனுமதிக்கப் பட்டிருந்தது. தினசரி ஐந்தாயிரம் பக்தர்கள் வரை புக்கிங் செய்வதற்காக வசதி காணப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தரிசனத்துக்கு முன்பதிவு செய்பவர்கள் அப்பம், அரவணை பிரசாதத்துக்கும் முன்பதிவு செய்தால் சன்னிதானத்தில் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். எத்தனை எண்ணம் என்பதை பதிவு செய்து அதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். அதன் பின்னர் கிடைக்கும் கூப்பனில் இதற்கான பார்கோடு இருக்கும். இதை 18-ம் படிக்கு தெற்குபக்கம் உள்ள ஆறாம் எண் கவுண்டரில் காட்டினால் பிரசாதம் உடனடியாக கிடைக்கும். இதன் மூலம் பிரசாதத்துக்கு டிக்கெட் வாங்க கியூவில் நிற்கும் நேரம் மிச்சமாகும்.