பதிவு செய்த நாள்
27
டிச
2012
10:12
சபரிமலை: சபரிமலையில் கடைசி நாளில், மிரள வைத்த பக்தர்கள் கூட்டத்தின் மத்தியில், நடைபெற்ற பூஜையுடன், மண்டலகாலம் நிறைவு பெற்றது. இனி மகர விளக்குக்காக, வரும் டிச., 30 மாலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலத்தின் கடைசி நாளான நேற்று, பக்தர்கள் கூட்டம் மிரளவைத்து விட்டது. காட்டின் நடுவில் 5 முதல் 8 மணி நேரம் வரை காத்திருந்த பக்தர்கள், பம்பை வந்த பின்னர் 8 முதல் 10 மணி நேரம் வரை கியூவில் நின்று தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்காக, நெய்யபிஷேகம் காலை 11 மணிக்கே நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பின்னர், கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, முன்புறம் உள்ள மண்டபத்தில், தந்திரி கண்டரரு ராஜீவரரு களபபூஜை நடத்தினார். அதன்பின், பிரம்மகலசத்தில் களபம் நிரப்பப்பட்டு, அதை வாத்திய மேளத்துடன், மேல்சாந்தி தாமோதரன் போற்றி, கையில் ஏந்தி கோயிலை வலம் வந்தார். ஐயப்பனின் மூல விக்ரகத்தில் களபம் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, மண்டல பூஜை நடைபெற்றது. தந்திரி கண்டரரு ராஜீவரரு தீபாராதனை நடத்தி, பூஜையை நிறைவு செய்தார். மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இரவு அத்தாழபூஜைக்கு பின், 10 மணிக்கு நடை மூடப்பட்டது. இன்று முதல் டிச.,30 மாலை வரை பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். டிச.,30 மாலை 5.30 க்கு மீண்டும் நடை திறந்ததும், மகரவிளக்கு காலம் துவங்கும். டிச.,31 ல், அதிகாலை 4 மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிஷேகம் துவங்கும். ஜன.,14 ல் மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது.