சபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு: 20 காலை நடை அடைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2013 11:01
20 காலை நடை அடைப்பு: சபரிமலையில் மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவு பெறுகிறது. 20-ம் தேதி காலையில் நடை அடைக்கப்படுகிறது. சபரிமலையில் மகரவிளக்கு விழா கடந்த 14-ம் தேதி நிறைவு பெற்றது. இனி19-ம் தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும். எனினும் காலை 10.30 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். அதன் பின் வரும் பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்ய முடியாது அதற்கு பதிலாக நெய்தோணியில் நெய்யை ஊற்றி விட்டு பிரசாதமாக நெய் வாங்கி செல்லலாம். 19-ம் தேதி இரவு பத்து மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் நடத்தலாம். நேற்று முதல் படிபூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகரவிளக்கு விழா நடைபெற்ற நாள் முதல் மாளிகைப்புறத்தம்மன் யானை மீது எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று மாளிகைப்புறத்தம்மன் ஐயப்பனிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், எதாவது ஒரு ஆண்டு கன்னி ஐயப்பன் தன்னை காணவராத ஆண்டில் திருமணம் செய்தாக ஐயப்பன் கூறியதாகவும் வரலாறு கூறுகிறது. அதை நினைவு கூரும் வகையில் இந்த எழுந்தருளல் நடைபெறும். மூன்று நாட்கள் 18-ம் படி வரையிலும், நான்காவது நாள் சரங்குத்திக்கும் இந்த பவனி செல்லும். சரங்குத்தியில் கன்னி ஐயப்ப பக்தர்கள் வந்ததன் அடையாளமாக குத்தப்பட்டிருக்கும் சரத்தை கண்டு மாளிகைப்புறத்தம்மன் திரும்புவார். நாளை மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடைபெறுகிறது. 20-ம் தேதி காலையல் பந்தளம் மன்னர் பிரதிநிதி அசோகராமவர்மா ஸ்ரீகோயில் முன்புறம் வருவார். அவரது முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி நடை அடைத்து கோயில் சாவியையும், இந்த ஆண்டு வருமானம் என்று கூறி ஒரு பணமுடிப்பையும் கொடுப்பார். அதை பெற்றுக்கொள்ளும் மன்னர் பிரநிதி அந்த பணத்தையும், கோயில் சாவியையும் மேல்சாந்தியிடம் கொடுத்து வரும் நாட்களிலும் பூஜைகள் தவறாமல் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு திருவாபரணங்களுடன் பந்தளம் திரும்புவார். அத்துடன் இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு பெறும்.