பதிவு செய்த நாள்
05
ஆக
2013
12:08
கடலூர்:கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், முகூர்த்த நாட்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முகூர்த்த நாளில் 50 திருமணங்கள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது.நடுநாட்டுத் திருப்பதிகளில், ஒன்றான கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், திருமணம் செய்தால், வாழ்க்கை சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியைச் சேர்ந்த ஏராளமானோர் திருமணம் செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.சிலர் கோவிலில் திருமணம் செய்து, அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துகின்றனர். கோவிலில், போதிய இடவசதியில்லாத நிலையில், முக்கிய முகூர்த்த நாட்களில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் வரை நடந்துள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கூட்ட நெரிசலில் பக்தர்களும், பொதுமக்களும் சுவாமியை தரிசனம் செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். இதனைத் தவிர்க்கும் பொருட்டு, ஹயக்கிரீவர் சன்னதி அருகே புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி துவங்கப்பட்டது.ஆனால், இப்பணி இன்னமும் முடிவடையவில்லை. இந்நிலையில், கூட்ட நெரிசலைப் படிப்படியாக குறைக்கும் பொருட்டு, கோவில் நிர்வாகம் நாளொன்றுக்கு 50 திருமணம் மட்டுமே நடத்தப்படும் என கட்டுப்பாடு விதித்து, அறிவிப்பு பலகை வைத்துள்ளது.அதில், "இக்கோவிலில், போதிய இடவசதியின்மையால், நாள் ஒன்றுக்கு 50 திருமணங்களுக்கு மேல் நடத்த இயலாத நிலை உள்ளது. இங்கு, திருமணம் நடத்த விரும்புபவர்கள், கோவில் அலுவலகத்தில் அளிக்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, குறிப்பிட்ட ஆவணங்களுடன் திருமணம் நடப்பதற்கு 7 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.ஒவ்வொரு நாளுக்கும் முன்னுரிமை அடிப்படையில், முதலில் பதிவு செய்யப்படும். 50 திருமணங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இக்கோவிலில், முகூர்த்த நாட்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக திருமணங்கள் நடப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்து, பக்தர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நாளொன்றுக்கு 50 திருமணங்கள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.ஹயக்கிரீவர் சன்னதி அருகே கட்டப்படும் புதிய திருமண மண்டப கட்டுமான பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.