திருப்பரங்குன்றம் கோயிலில் தீர்த்த உற்ஸவம்: வெள்ளி குடங்களில் சுவாமிகளுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2025 03:12
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச நிகழ்ச்சியாக தீர்த்த உற்ஸவம் இன்று நடந்தது.
நவ. 25ல் துவங்கிய விழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி ரத வீதிகளில் புறப்பாடாகினர். தீர்த்த உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று உற்ஸவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, விநாயகர், அஸ்தரதேவர் எழுந்தருளினர். நவ. 25முதல் நடைபெற்று வந்த யாகசாலை பூஜை இன்று காலை பூர்த்தி செய்யப்பட்டு வெள்ளி குடங்களிலிருந்த புனித நீர் மூலம் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மலர் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு அஸ்தரதேவர் பல்லக்கிலும், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிம்மாசனத்திலும் சரவணப்பொய்கையில் எழுந்தருளினர். ஆறுமுக சுவாமி சன்னதியில் யாக பூஜை முடிந்து சரவணப் பொய்கை தண்ணீரில் அஸ்தரதேவரை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று தீர்த்த வாரி உற்ஸவம் நடந்தது. இரவு தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணியசாமி, தெய்வானை ரத வீதிகளில் புறப்பாடாகி அருள் பாலித்தனர்.