பதிவு செய்த நாள்
17
ஏப்
2014
11:04
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா, கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா தொடங்கியதை தொடர்ந்து, நேற்று அதிகாலை 4 மணிக்கு உற்சவர் கோயில் வீட்டில் இருந்து கிளம்பி, காலை 7 மணிக்கு கோயிலில் எழுந்தருளினார். தொடர்ந்து முல்லை பெரியாற்றில் அத்திமர முக்கொம்பிற்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. அடுத்து கண்ணீஸ்வர முடையார் கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் திருக்கோயில் முறைதாரர்கள் மாற்று விரித்து, முக்கொம்பினை கம்பத்தடி மண்டபத்திற்கு கொண்டு வந்து நட்டனர். தொடர்ந்து முறைதாரர் மாரிச்சாமி, குபேந்திரபாண்டியன் வகையறாக்கள் முக்கொம்பிற்கு சக்தி ஏற்றினர். போடி அரியணன் புல்லணன் செட்டியார் வகையறாக்கள் அரிவாள் மீது நின்று வந்து, முக்கொம்பிற்கு முதல் மரியாதை செய்து தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து பூஜாரிகள், பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். வீரபாண்டி பேரூராட்சி தலைவர் ரத்தினசபாபதி, கோயில் நிர்வாக அலுவலர் சுரேஷ், வீரபாண்டி பேரூராட்சி நிர்வாக அலுவலர் செந்தில்குமார், டி.எஸ்.பி., சீமைச்சாமி, இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்றனர். கோயில் முக்கிய திருவிழா, மே 6ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடக்கிறது. கோயில் கம்பம் நடுதல் நிகழ்ச்சி தொடங்கியதை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் பக்தர்கள் விரதம் தொடங்கி, அக்னிசட்டி எடுத்து நகர் வலம் வருவார்கள். நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் இப்போதிருந்தே தங்கள் நேர்த்திக் கடனை செலுத்த தொடங்கி விடுவார்கள், என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.