பதிவு செய்த நாள்
17
ஏப்
2014
11:04
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில், போக்குவரத்தை சீர்படுத்த, காவலர்கள் இல்லாததால், ஆதிகேசவப் பெருமாள் சேஷ வாகன வீதி உலாவில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் சித்திரை பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு, ஆதிகேசவப்பெருமாள் அலங்கரிக்கப்பட்ட சேஷ வாகனத்தில், எழுந்தருளி தேரடி, காந்தி ரோடு, செட்டி தெரு, திருமங்கையாழ்வார் தெருக்களில் வீதி உலா வந்தார். அப்போது, காந்தி சாலையில், பேருந்து நிலையம் அருகே, போக்குவரத்தை மாற்றிவிட, போலீசார் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஆதிகேசவப் பெருமாள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். இன்று, காலை கருட சேவையும், மாலையில் அனுமந்த வாகனத்திலும் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருள்வார்.