பதிவு செய்த நாள்
17
ஏப்
2014
12:04
அரியலூர்: கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் கலியபெருமாள் கோவில் எனப்படும் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சேலம், விழுப்புரம், கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்பட, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, பல லட்சம் மக்களின் பிரார்த்தனை தலமாக இக்கோவில் விளங்குகிறது. சிறப்பு பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆண்டு பெருந்திருவிழா, கடந்த, 8ம் தேதி ஸ்ரீராமநவமியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 12ம் தேதி ஐந்தாம் நாள் திருவிழாவாக வெள்ளி கருடசேவை, படத்தேர், 14ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் கண்ணாடி பல்லக்கு, 15ம் தேதியன்று வெண்ணைத்தாழி உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முதல் தேரில் ஆஞ்சநேயரும், இரண்டாவதாக வந்த பெரிய தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளும் எழுந்தருளினர். கோவிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாட்சி, அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்ராபதி, அரியலூர் உதவி கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, தாசில்தார் முருகன், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டனர். நேற்று காலை, 7 மணிக்கு துவங்கி நான்கு வீதிகள் வழியாக நடந்த தேரோட்டம் முற்பகலில் தேரடியை அடைந்தது. கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, ஆத்தூர், பெரம்பலூர், துறையூர், ஜெயங்கொண்டம், திட்டக்குடி, விருத்தாஜலம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும், 100க்கும் மேற்பட்ட அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.