பதிவு செய்த நாள்
31
மே
2025
10:05
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு நாட்கள் நடைபெறும் வசந்த உத்சவம் கடந்த 24ம் தேதி துவங்கியது. உத்சவத்தையொட்டி, தினமும் காலையில் கண்ணாடி அறையில் எழுந்தருளிய பெருமாளுக்கு விசேஷ பூஜை நடந்தது. மாலை 6:00 மணியளவில், கண்ணாடி அறையில் இருந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள் கடந்த 6 நாட்களாக, தினமும் வெவ்வேறு அலங்காரத்தில், சன்னிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சன்னிதியில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பாடாகி, கோவிலில் உள்ள அத்தி வரதர் மண்டபம் என, அழைக்கப்படும் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளிய பெருமாளுக்கு, திருவாராதனம் உள்ளிட்ட பூஜை நடந்தது. வசந்த உத்சவம் நிறைவு நாளான நேற்று காலை 11:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து வரதராஜ பெருமாள் புறப்பாடாகி, வசந்த மண்டபம் வந்தடைந்தார். அங்கு சிறப்பு திருமஞ்சனமும், பக்தர்கள் பொது தரிசனமும் நடந்தது. மாலை 6:00 மணியளவில், குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் ஸ்ரீசடாரி தீர்த்தவாரி உத்சவம் நடந்தது. உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி, கோவில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்திருந்தனர்.