பதிவு செய்த நாள்
01
ஜூன்
2025
11:06
திருப்பூர் முத்தணம்பாளையத்தில் உள்ள, ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், அம்மன் சுயம்பு புற்றாகவும், அங்காளம்மனாகவும் அருள்பாலித்து வருகிறாள். பிற்கால பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில், இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதை, ஆங்காங்கே பொரித்துள்ள மீன் சின்னங்களே உறுதி செய்கின்றன. கோவிலில், ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீகருப்பணசுவாமி, ஸ்ரீபுரவையம்மன், ஸ்ரீகவுண்டச்சியம்மன், ஸ்ரீஉடையாரம்மனுக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதர பரிவார தெய்வ சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
கோபுரங்கள் வர்ணம் தீட்டப்பட்டு, கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடக்க உள்ளது. பல்வேறு சமுதாய மக்களும் குல தெய்வமாக வழிபட்டு வரும் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இன்று, காலை மற்றும் மாலை, மங்கள இசை, விநாயகர் வழிபாடு, புண்யாகம், கணபதி ஹோமம், இதர யாகங்கள் நடக்கின்றன.
நாளை (2ம் தேதி) காலை, விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பூஜைகளும், மாலை, 4:00 மணிக்கு முளைப்பாலிகை ஊர்வலமும் நடக்க உள்ளது. கோவில்வழி பெரிய அழகுநாச்சியம்மன், சின்னம்மன் கோவிலில் இருந்து, 2 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் முளைப்பாரி எடுத்துவர உள்ளனர். கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள், 3 ம் தேதி காலை, துவங்குகிறது. மங்கள இசை, விநயாகர் வழிபாடுடன், தினமும் காலை மற்றும் மாலை யாகசாலை பூஜைகள், நிறைவேள்வி பூஜைகள் நடக்க உள்ளன. வரும், 5ம் தேதி காலை, 11:00 மணிக்கு கோபுரங்களுக்கு கலசம் பொருத்தி, பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தனம் நடக்க உள்ளது.
ஐந்தாம் கால வேள்வி பூஜை முடிந்து, அம்மனுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்படும். வரும், 6ம் தேதி காலை 4:00 மணிக்கு, ஆறாம் கால வேள்வி பூஜை நடக்கும். காலை, 5:30 மணிக்கு, புனித தீர்த்தம் உள்ள கலசம் எடுத்துச்செல்லப்பட்டு, கோபுரங்கள் மற்றும் மூலாலய விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. காலை, 6:00 மணிக்கு, அங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. தொடர்ந்து, மகா அபிஷேகம், தசதானம், தசதரிசனம், கோபூஜை நடக்கும்; காலை, 6:00 மணி முதல், அன்னதானம் வழங்கப்படும்.
அன்று மாலை, 6:00 மணிக்கு, அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி, இன்று முதல், கும்மியாட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழு, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். எழில் பொங்கும் அங்காளம்மன் கோவில் வளாகமும், கும்பாபிஷேக பூஜைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்திரலோகம் போன்ற யாகசாலைகளும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகின்றன.