பதிவு செய்த நாள்
30
அக்
2014
02:10
சென்னிமலை : சென்னிமலை மலை மீதுள்ள ஸ்ரீசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், கடந்த, 24ம் தேதி காலை, கந்த சஷ்டி விழா துவங்கியது. அன்று காலை, 8 மணிக்கு சென்னிமலை கிழக்கு ரத வீதி கைலாசநாதர் கோவிலில் இருந்து, முருகன், வள்ளி, தெய்வானை சமேதராக, உற்சவமூர்த்தி புறப்பாடு துவங்கி, மலை கோவிலை அடைந்தது.காலை, 9 மணிக்கு யாக பூஜை, உற்சவர், மூலவர் அபிஷேகம், 12 மணிக்கு தீபாராதனை நடந்தது. அன்று முதல் தினமும், பகல், 12.30 மணிக்கு, முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேம், மதியம், 1 மணிக்கு அன்னதானம் நடந்தது.முக்கிய நிகழ்வான நேற்று இரவு, உற்சவர் மலை அடிவாரத்தில் எழுந்தருளி, இரவு, 9.30 மணிக்கு, மேளதாளத்துடன், சூரசம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. மேற்கு ரத வீதியில், ஜெகமகாசூரன் வதமும், வடக்கு ரத வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ரத வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெருமான் இறுதியாக வதம் செய்தல் நடந்தது. பின், முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக, கைலாசநாதர் கோவிலில் ஏழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், விரதமிருந்து, சுவாமியை தரிசித்தனர். இன்று காலை, 11 மணிக்கு, முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.ஏற்பாடுகளை செங்குந்தர் கைக்கோள முதலியார் ஸ்ரீகந்த சஷ்டி விழாக் கமிட்டியார் மற்றும் கோவில் செயல் அலுவலர் ராஜா, தலைமை எழுத்தர் ராஜீ, தலைமை குருக்கள் ராமநாதசிவம் ஆகியோர் செய்தனர்.
* ஈரோடு திண்டல் மலை வேலாயுதசுவாமி கோவிலில், கடந்த, 24ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கி, தினமும் சிறப்பு அபிஷேகம், யாக பூஜைகள் நடந்தது. நேற்று மாலை, 6 மணிக்கு சூரசம்ஹாரம் துவங்கி, 8 மணிக்கு சூரபத்மனை வதம் செய்தல் நடந்தது. இன்று காலை, 9 மணிக்கு முருகப்பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது.