பதிவு செய்த நாள்
20
நவ
2014
11:11
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், கண்காணிப்பு கேமராக்கள் பழுதானதால், பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில், மீனாட்சி அம்மன் கோவில் உட்பட, முக்கிய கோவில்களுக்கு, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது. இதையடுத்து, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை வீதிகள், அம்மன் மற்றும் சுவாமி சன்னிதி, பொற்றாமரைக்குளம், ஆயிரம் கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில், 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் பதிவாகும் நிகழ்வுகளை, கோவிலுக்குள் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் கோவில் இணை கமிஷனர் அலுவலகத்தில் பார்க்க இயலும். சமீபத்தில் பெய்த மழையால், 34 கேமராக்கள் பழுதானது; இரண்டு மட்டும் இயங்குகிறது. சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால், கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால், கோவில் நடை திறக்கும் நேரமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. கேமராக்கள் பழுதால், கோவிலுக்குள் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவில் இணை கமிஷனர் நடராஜன் கூறுகையில், ”கேமராக்களில் பழுது நீக்கும் பணி துரிதமாக நடக்கிறது. போலீசார், கோவில் ஊழியர்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்,” என்றார்.