பதிவு செய்த நாள்
25
நவ
2014
11:11
திருச்சி: திருச்சி, மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா, டிசம்பர், 5ம் தேதி நடக்கிறது. அன்று மாலை, 5 மணிக்கு செவ்வந்தி விநாயகர், தாயுமான ஸ்வாமி, மட்டுவார்குழலம்மை, உற்சவர் மூர்த்திகளுக்கு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மாலை, 6 மணிக்கு, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் சன்னதி முன் உள்ள, 50 அடி உயர தீப ஸ்தம்பத்தில் வைக்கப்பட்டுள்ள கொப்பறையில், மொத்தம், 1,000 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றை சேர்த்து, 6,000 மீட்டர் பருத்தி துணிகளை கொண்டும் திரி அமைத்து, தீபம் ஏற்றப்படும். நேற்று மதியம், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் முன் உள்ள கொப்பறையில், திரி பதித்து, இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி ஊற வைக்கும் பணி நடந்தது. டிசம்பர், 5ம் தேதி மாலை, கொப்பறையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் தொடர்ந்து, மூன்று தினங்களுக்கு எரியும். கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஆணையர் சுரேஷ், கோவில் பணியாளர்கள் செய்கின்றனர்.