சபரிமலையில் தினமும் 40 ஆயிரம் ’டின் ’ அரவணை தயாரிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2014 11:12
சபரிமலை : ’தினமும் 40 ஆயிரம் டின் அரவணை தயாரிக்க தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் பக்தர்களுக்கு கூடுதல் அரவணை வழங்கப்படும்,” என கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் கூறினார். சன்னிதானத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சர் கூறியதாவது:பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்போது ஏற்படும் சிரமங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை சார்பில் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளது. பம்பை மற்றும் சன்னிதானத்தில் 1.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருதய நோய் பாதிப்புடன் வந்த138 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மண்டல பூஜை பாதுகாப்புக்காக 2150 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அரவணை தயாரிப்பில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக சபரிமலை ஒருங்கிணைப்பாளர் ஜோதிலால் ஆய்வு செய்துள்ளார். உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் கூறியுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் அரவணை உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தற்காலிக அடுப்புகள் அமைத்து தினமும் 40 ஆயிரம் டின் அரவணை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஒரு பக்தருக்கு ஐந்து டின் அரவணை வழங்கப்படும். மகரவிளக்கு காலத்தில் அரவணை விநியோகத்தில் உள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.மகரவிளக்குக்கு முன் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் மீண்டும் ஒரு ஆலோனை கூட்டம் நடைபெறும். சன்னிதானத்தில் கழிவு நீரை சுத்திகரிக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும். பம்பையில் அடுத்த சீசனுக்கு முன் மேலும் ஒரு சுத்திகரிப்பு திட்டம் அமைக்கப்படும். பம்பையிலிருந்து சன்னிதானத்துக்கு ’ரோப்வே’ அமைக்க ரூ.15 கோடி செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு கோல்கட்டா கம்பெனிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் சபரிமலைக்காக மாநில அரசு ரூ. 425 கோடி செலவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன்நாயர், நிர்வாக அதிகாரி ஜெயக்குமார், பி.ஆர்.ஓ., முரளி உடனிருந்தனர்.