பதிவு செய்த நாள்
01
ஏப்
2015
11:04
கோவை : மேலைச்சிதம்பரம் என்று பக்தர்கள் போற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நேற்று, கோலாகலமாக நடந்தது. பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பங்குனி உத்திரத்தேர்த்திருவிழா, கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பச்சைநாயகியம்மன் உடனமர் பட்டீஸ்வர சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, யாகசாலை, வேள்வி பூஜைகள் நடந்தது. அபிஷேகம் நிறைவடைந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலை வலம் வந்த சுவாமி, தேரில் எழுந்தருளுவிக்கப்பட்டார். பக்தர்கள் தேரில் வீற்றிருக்கும் சுவாமியை வழிபட்டனர்.நேற்று மாலை தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அரசு அதிகாரிகள், ஆதினங்கள், சிவாச்சாரியார்கள் வடம் பிடித்து இழுக்க, தேர் மெல்ல மெல்ல நகர்ந்தது. நிலையிலிருந்து புறப்பட்ட தேர், சிறுவாணி சாலை, மேற்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி வழியாக தேர்நிலையை அடைந்தது. தேர் சென்ற வழியெங்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். தேரின் மீது, உப்பு, பழம் ஆகியவற்றை வீசியும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவையொட்டி போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.