பதிவு செய்த நாள்
25
மே
2015
11:05
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், 17 ஆண்டு களுக்கு பின், மகா சம்ப்ரோக்ஷணம், ஜூன் 7ம் தேதி நடக்கிறது. திருவள்ளூர் வீரராகவர் கோவில், 108 வைணவ தலங்களில் ஒன்று. திருமழிசைபிரான், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இக்கோவிலில், 1998ம் ஆண்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது.அதன்பின், 17 ஆண்டு களுக்கு பின், மகா சம்ப்ரோக்ஷணம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக கோவில் கோபுரம், துாண்கள் புனரமைக்கும் பணியும், திருக்குளம் சீரமைக்கும் பணியும் ஓராண்டாக நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ளன. இதையடுத்து, வரும் ஜூன் 7ம் தேதி, மகா சம்ப்ரோக்ஷணம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளது. இதுகுறித்து, வீரராகவர் கோவில் கவுரவ ஏஜன்ட் சம்பத் கூறுகையில், வீரராகவ பெருமாள் கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், சம்ப்ரோக்ஷணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ஆறு கோடி ரூபாய் செலவில் கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். மேலும், பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வரும் ஜூன் 7ம் தேதி, அதிகாலை 5:15 மணி முதல், 6:15 மணிக்குள் மகா சம்ப்ரோக்ஷணம் ஸ்ரீவண்சடகோப ரங்கநாதயதீந்திர மகாதேசிகன் தலைமையில் நடைபெற உள்ளது என்றார்.