Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமந்திரம் | முதல் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல் திருமந்திரம் | முதல் தந்திரம் | ...
முதல் பக்கம் » பத்தாம் திருமறை
திருமூலர் வரலாறு | திருமந்திரம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 செப்
2011
03:09

பன்னிரு திருமுறைகளில் திருமூலர் எழுதிய திருமந்திரம் 10ம் திருமுறையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.  யோகிகள் பல்லாண்டு காலம் உயிர் வாழ்ந்திருப்பார் என்பது நூற் கொள்கை. திருமூலர் ஒரு யோகி. ஆகவே அவர் தான் கற்ற வித்தையை உலகிற்குக் கூறுகின்றார். உடல் வேறு, உயிர்வேறு. இவையிரண்டும் ஒன்று சேர்ந்து இருந்தால் தான் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களையும் அடைய முடியும் என்ற அந்த உபாயத்தைத் திருமூலர் நமக்குக் கூறுகின்றனர். திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக உள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு தந்திரம் எனப் பெயர் பெறும். திருமூலர் காலத்துத் தமிழகத்தில் சைவசமயம் இருந்த நிலைமையை உணர இச் செய்திகள் பொருந்துணை புரிய வல்லவை.

பரகாயப் பிரவேசம் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பது அதன் பொருள். அதாவது ஓர் உயிர் தான் குடியிருக்கும் உடலை விட்டு நீங்கி, மற்றோர் உடம்பினுள் நுழைந்து, அவ்வுடம்பிற்கு ஏற்றவாறு செயல் படுதல். விக்கிரமாதித்தன், ஆதிசங்கரர், அருணகிரிநாதர் ஆகியோர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த செய்திகளை நாம் படிக்கிறோம். அதுபோல் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருமூலரும் மூலன் என்பவனின் உடம்பில் புகுந்து ஆகமப் பொருளைக் கூறியுள்ளார். உயிர் வேறு, உடல் வேறு என்ற தத்துவத்திற்குக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை ஓர் உதாரணமாக விளங்குகிறது.

கயிலாய மலையில் நந்தி தேவரின் உபதேசத்தைப் பெற்ற யோகியார் ஒருவர், அவர் அட்டமா சித்தி பெற்றவர். அவர் அகத்தியரிடத்துக் கொண்டு நட்பால் பொதியமலை நோக்கி வந்தார். திருவாவடுதுறையை அடைந்தார். ஆங்கு இறைவரை வணங்கினார். அப்பதியினின்று அகன்று போகும் போது காவிரியாற்றின் கரையில் பசுக்கூட்டம் அழுவதைப் பார்த்தார். அப்பசுக்கள் மேய்க்கும் மூலன் என்ற இடையன் இறந்து கிடந்தான். யோகியார் அப்பசுக்களின் துன்பத்தைப் போக்க எண்ணினார். தாம் பயின்ற சித்தியினால் அம்மூலன் என்பவனின் உடலில் தம் உயிரைப் புகுத்தினார். பசுக்கள் மகிழ்ந்தன. திருமூலர் மாலையில் அப்பசுக்கூட்டங்களைக் கொண்டு அவற்றின் இருப்பிடங்களில் செல்லச் செய்தார். அவை வழக்கம் காரணமாகத் தம் வீடுகளுக்குச் சென்றன. திருமூலர் ஓரிடத்தில் நின்றார். மூலன் என்ற இடையனின் மனைவி தன் கணவன் இன்னும் வரவில்லையே என்று தேடிக் கொண்டு சென்றாள்! தன் கணவன் போல நின்ற யோகியாரைப் பார்த்தாள். அவர்க்கு ஏதோ நேர்ந்து விட்டது என்று எண்ணி அவரைத் தம் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றாள். முடியவில்லை. அதனால் மனம் கவன்று அவள் இல்லம் திரும்பினாள். அன்று இரவு கழிந்தது. மறுநாள் அவள் தன் கணவனின் நிலையைப் பலரிடம் உரைத்தாள். அவர்கள் திருமூலரிடம் சென்றனர். அப்போது திருமூலர் யோகத்தில் இருக்கக் கண்டு அவரை மாற்ற இயலாது என்று மூலனின் மனைவியிடம் உரைத்தனர். அவள் பெரிதும் துன்பம் அடைந்தாள்.

யோகத்தினின்று எழுந்து யோகியார் தாம் வைத்திருந்த உடலைத் தேடிப் பார்த்தார். அது கிடைக்கவில்லை. தம் யோகவன்மையால் இறைவரின் உள்ளத்தை உணர்ந்தார். சிவாகமப் பொருளைத் திருமூர் வாக்கால் கூற வேண்டும் என்பது இறைவரின் திருவுள்ளம். அதனால் தம் உடல் இறைவரால் மறைக்கப்பட்டது என்பதை அறிந்தார். திருமூலர் சாத்தனூரிலிருந்து சென்றபோது இடையர் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்க்கு அவர் உண்மையை உரைத்து, திருவாவடுதுறையை அடைந்து இறைவரை வணங்கிக் கோயிலுக்கு மேற்கில் உள்ள அரசமரத்தின் கீழ் சிவராச யோகத்தில் இருந்து மூவாயிரம் ஆண்டுகளில் மூவாயிரம் செய்யுளை இயற்றினார். பின் இறைவரது திருவடி நிழலை எய்தினார்.

முதல் தந்திரம்

யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை, காம அடக்கம், அந்தணர் ஒழுக்கம், அரசன் கடமை, அறஞ்செய்தலின் சிறப்பு, அன்பை வளர்த்தல், பிறர்க்கு உதவி செய்தல், கற்றோரிடமிருந்தும், நூல்களில் இருந்தும் அறிவை வளர்த்தல், மனத்தை விருப்பு வெறுப்புக்களிற் செல்ல விடாமை போன்ற அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.

இரண்டாம் தந்திரம்

அகத்தியர் தென்னாடு போந்தமை, சிவனுடைய எட்டு வீரச் செயல்கள், லிங்கத்தின் தோற்றம், தக்கயாகம், பிரளயம் பற்றி புராணக் கதைகள் குறிக்கப்பட்டுள்ளன. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் சிவனுடைய ஐந்தொழில்களும், சக்தி, சிவன் விளையாட்டால் உண்டான ஜீவர்கள், விஞ்ஞானகலர், சகலர், பிரளயாகலர் என்னும் மூவகையினர் என்பதும் அவருள் மதிக்கத்தக்கவர் யாவர் என்பது விளக்கப்பட்டுள்ளன. கோவில்களை அழிப்பது தீது சிவநிந்தை தீது, அடியார் நிந்தை தீது, பொறையுடைமை, பெரியாரைத் துணைக் கோடல் என்பன குறிக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் தந்திரம்

இப்பகுதி முழுவதும் யோகத்தைப் பற்றியது. ஆனால் பதஞ்சலி கூறும் யோக முறையன்று. இயமம் முதலிய எண்வகை யோகமுறைகளும் அவற்றால் அடையும் பயன்களும் பிறவும் கூறப்பட்டுள்ளன.

நான்காம் தந்திரம்

மந்திர சாத்திரம் அல்லது உபாசனா மார்க்கத்தைப் பற்றியது. அஜபா மந்திரம், சபாலி மந்திரம் கூறப்பட்டுள்ளன. திரு அம்பலச் சக்கரம், திரிபுரச் சக்கரம், ஏரொளிச் சக்கரம், பைரவச் சக்கரம், சாம்பவி மண்டலச் சக்கரம், புவனாபதிச் சக்கரம், நவாஷர் சக்கரம் என்பவை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.

ஐந்தாம் தந்திரம்

சைவத்தின் வகைகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் இவைகளும் கூறப்பட்டுள்ளன. புறச் சமயங்கள் கண்டிக்கப்படுகின்றன. உட் சமயங்கள் ஏற்கப்படுகின்றன.

ஆறாம் தந்திரம்

உயிர் நாடியாக உள்ளவை சிவ குரு தரிசனம். அவனது திருவடிப் பேறு, ஞானத்தில் பொருள் தெரிபவன், தெரியப்பட்ட பொருள், துறவு, தவம், அருளில் இருந்து தோன்றும் ஞானம், தக்கவர் இலக்கணம், தகாதவர் இலக்கணம், திருநீற்றில் பெருமை என்பவையாகும்.

ஏழாம் தந்திரம்

ஆறு ஆதாரங்கள், ஆறு லிங்கங்கள், சமய சிறப்புப் போதனை, ஐம்புலன்களை அடக்கும் முறை, குருவின் வருணனை, கூடா ஒழுக்கம் முதலியன பேசப்பட்டுள்ளன.

எட்டாம் தந்திரம்

சித்தாந்தத்தின் விளக்கம், காரிய காரண உபாதிகள், புறங்கூறாமை சிவ நிந்தை ஒழிப்பு, உண்மை பேசல், ஆசையை ஒழித்தல் முதலியவை கூறப்பட்டுள்ளன.

ஒன்பதாம் தந்திரம்

குரு, குருமடம், குரு தரிசனம், வைணவ சமாதி, ஸ்தூல, சூக்கும, அதிசூக்கும பஞ்சாட்சரங்கள் பேசப்பட்டுள்ளன. இறைவனது நடன வகைகள் முதலியனவும் ஞானம் மலர்தல், ஞானத்தின் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.

10ம் திருமுறையில் திருமூலரால் பாடப்பட்ட  3047 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

பொருள் : துதிக்கையோடு கூடிய ஐந்து கைகளையுடையவனும், யானை முகத்தையுடையவனும், இளம் பிறைச் சந்திரனைப் போன்ற தந்தத்தை உடையவனும், சிவனது குமாரனும், ஞானச் சிகரமாக விளங்குபவனும் ஆகிய விநாயகக் கடவுளை அறிவினில் வைத்து அவன் திருவடிகளைத் துதிக்கின்றேன்.

பாயிரம்

1.  கடவுள் வாழ்த்து

அஃதாவது கடவுளின் பெருமையைக் கூறி ஏத்துதல்

1. ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றனுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந்து எட்டே.

பொருள் : ஒரு பொருளாகிய சிவனே, இனிமையான சத்தியோடு இரண்டாயும், பிரமன், விஷ்ணு, உருத்திரன் என்று மூன்று நிலைகளில் நிற்பவனாயும், நான்கு புருஷார்த்தங்களை உணர்ந்தவனாயும், மெய், வாய், கண், மூக்கு செவியாகிய ஐந்து இந்திரியங்களை வென்றவனாயும், மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களில் விரிந்தவனாயும் அதற்கு மேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரத்தின் மேல் விளங்குபவனாயும், நிலம், நீர், தீ, காற்று, விண், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து விளங்குகிறான். இந்த எண்களுக்கு வேறு பொருள் கூறுவாரும் உளர்.

2. போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்குஒரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

பொருள் : இனிமையான உயிரில் பொருந்தியிருக்கும் தூய்மையானவனும் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனும் மேலே சொல்லாப் பெற்ற திசைகளுள் தெற்குத் திசைக்குரிய இயமனை உதைத்தவனும் ஆகிய இறைவனைப் புகழ்ந்துபாடி நான் உரைக்கின்றேன்.

3. ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்கநின்று உன்னியான் போற்றி செய் வேனே.

பொருள் : உடனாய் நின்றவனும் அழிவில்லாத தேவர்கள் ஆடையில்லாதவன் என்று பரவும் தலைவனும், பக்கத்திலுள்ள திருமால் முதலிய தேவர்கள் அறிய முடியாத மேலோனும் ஆகிய இறைவனை நான் அணுக்கமாக இருந்து அனுதினமும் வழிபாடு செய்வேன். நக்கன் தத்துவங்களைக் கடந்தவன்; மலமில்லாதவன்; மாசில்லாதவன் என்று பொருள் கூறுவாரும் உளர்.

4. அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந்து ஏத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

பொருள் : அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருளானவனும், ஆகாய மண்டலத்துக்கு வித்துப் போன்றவனும் அடைக்கலமான இடத்தில் என்னைச் செல்லவிட்டவனும் ஆகிய இறைவனை, பகலிலும் இரவிலும் வணங்கிப் பரவி, மாறுபாடு உடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கி நின்றேன்.

5. சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார்இங்க யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

பொருள் : சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை. இனி, அவனுக்கு உவமையாக இங்கு அகத்தே உடம்பிலும் எவரும் இல்லை. அவன் அண்டத்தைக் கடந்து நின்றபோது பொன்போன்று பிரகாசிப்பான். செந்நிறம் பொருந்திய ஊர்த்துவ சகஸ்ரதளத்தாமரையில் விளங்குபவன் ஆவான். (அவன் அன்பர்களின் நெஞ்சத் தாமரையில் உறைபவன் என்பது மற்றோர் சாரார் கருத்து)

6. அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன்அன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவன்அன்றி மூவரால் ஆவதுஒன்று இல்லை
அவன்அன்றி ஊர்புகு மாறுஅறி யேனே.

பொருள் : சிவனைக் காட்டிலும் மேம்பட்ட தேவர்கள் ஒருவரும் இல்லை. அவன் அல்லாது செய்கின்ற அருமையான தவமும் இல்லை. அவனை அல்லாது பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை. அவனையல்லாது வீடு பேறு அடைவதற்குரிய வழியை அறியேன்.

7. முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாய்உளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே

பொருள் : பொன்னைப் போன்ற சகஸ்ரதளத்தில் விளங்குபவனே, பழமையாகவே சமமாக வைத்து எண்ணப்படும் பிரமனாதி மூவர்க்கும் பழமையானவன். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தலைமகன். அவனை யாரேனும் அப்பனே என்று வாயார அழைத்தால் அப்பனாக இருந்து உதவுவான். போதகத்தான் - உள்ளமாகிய தாமரை மலர்மீது உள்ளவன் என்பது ஒரு சாரார் கருத்து.

8. தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

பொருள் : தாழ்ந்த சடையையுடைய சிவன் தீயைக் காட்டிலும் வெம்மையானவன்; அன்பர்க்கு நீரைக் காட்டிலும் குளிர்ச்சியானவன்; குழந்தையினும் நல்லவன்; பக்கத்தில் இருப்பவன்; அவனிடம் அன்பு செய்வர்க்குத் தாயைக் காட்டிலும் கருணை புரிபவன். இவ்வாறு இருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை.

9. பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வார்இல்லை தானே.

பொருள் : பொன்னால் செய்யப்பெற்ற அழகான சடை என்று கூறுமாறு அவன் பின்புறம் விளங்க இருப்பவன். அவனது திருநாமம் நந்தி என்பதாகும். என்னால் வணங்கத் தக்கவன் உயிர்கட்கு எல்லாம் தலைவனாகிய சிவன். ஆனால் அப் பெருமானால் வணங்கத் தக்கவர் பிறர் எவரும் இல்லையாம். நந்தி - பிறப்பு இல்லாதவன்.

10. தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடுஅங்கி ஞாயிறும் திங்களும்
தானே மறைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே.

பொருள் : சிவனாகிய தானே இப்பூவுலகத்தைத் தாங்கிக் கொண்டு ஆகாய வடிவினனாக உள்ளான். அவனே சுடுகின்ற அக்கினியாகவும் சூரியனாகவும் சந்திரனாகவும் உள்ளான். அவனே அருள் பொழியும் சத்தியனாய் இருக்கின்றான். அவனே விசாலமான மலையாகவும் குளிர்ச்சியான கடலாகவும் உள்ளான். இப்பாடலுக்குத் திருவருள் ஆக அம்மையே இவ்வாறு இருக்கிறாள்  என ஒரு சாரார் பொருள் கூறி யுள்ளனர்.

11. அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும்ஒன்று இல்லை
முயலும் முயலில் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகில் பேர்நந்தி தானே.

பொருள் : தூரத்திலும் பக்கத்திலும் எமக்கு முன்னோனாகிய இறைவனது பெருமையை எண்ணினால் ஒத்ததாகச் சொல்லக் கூடிய பெரிய தெய்வம் பிறிதொன்றிலை முயற்சியும் முயற்சியின் பயனும், மழைபொழிகின்ற மேகமும் அவ் இறைவனேயாகும். அவன் பெயர் நந்தி என்பதாகும்.

12. கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என்று அறியகில் லார்களே.

பொருள் : நெற்றிக் கண்ணையுடைய சிவன் ஒப்பற்ற அன்போடு அழியாதிருக்கவும் எண்ணற்ற தேவர்கள் இறந்தாராக, மண்ணிலும் விண்ணிலும் வாழ்கின்ற பலரும் இச்சிவனே அழியாதிருக்க அருள்புரிபவன் என்று இவர் அறியாதிருக்கின்றனரே என் பேதைமை !

13. மண் அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண் அளந்து இன்னும் நினைக்கிலார் ஈசனை
விண்அளந் தான்தன்னை மேல்அளந் தார்இல்லை
கண்அளந்து எங்கும் கடந்துநின் றானே.

பொருள் : மண்ணை அளந்த மாயவன், அவனது உந்திக் கமலத்தில் உதித்த பிரமன் முதலாய தேவர்களும் சிவனை எண்ணத்தில் அகப்படுத்தி நினையாது இருக்கின்றனர். ஆகாயத்தில் விரிந்து விளங்குபவனை மண்ணுலகோர் கடந்து சென்று அறிய முடியவில்லை. ஆனால் அவன் கண்ணில் கலந்தும் எங்கும் கடந்தும் விளங்குகின்றான்.

14. கடந்துநின் றான்கம லம்மல ராகி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புரம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

பொருள் : சிவன் சுவாதிட்டமான மலரிலுள்ள பிரமனைக் கடந்துள்ளான். மணிபூரகத் தானத்திலுள்ள எமது மாயனாகிய விஷ்ணுவைக் கடந்துள்ளான். அவ் இருவர்க்கு மேல் அநாகதச் சக்கரத்திலுள்ள உருத்திரனைக் கடந்துள்ளான். இம் மூவரையும் கடந்து சிரசின் மேல் நின்று எங்கும் கண்காணித்துக் கொண்டுள்ளான்.

15. ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்து ஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

பொருள் : சிவன் உலகினைப் படைப்பவனாயும் அழிப்பவனாயும் உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும், அவற்றைக் கடந்து நிறைந்து விளங்குகிறான். திருவருள் சோதியாகயும் குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும் படைத்துக் காத்து அழித்து உயிர்களுக்கு வினையை ஊட்டுவிப்பான்.

16. கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே.

பொருள் : நரம்பு பொருந்திய கொன்றை மலரை அணிந்த சுருண்ட சடையையும் அழகு நிறைந்த ஒளியோடு கூடிய நெற்றியையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனுமாகிய சிவனை அமரரும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தி என்ன என்று பாராட்டிக் குணத்தை  நாடுவார் ? நாடமாட்டார்.

17. காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
மாயம் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசம் கலந்தொரு தேவன்என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிரில்லை தானே.

பொருள் : ஸ்தூல உடம்பும், சூட்சும உடம்பும் ஆகிய இரண்டும் ஒன்றாகக் கலந்த இருப்பினும் மாலை சம்பந்தமுடைய சூக்கும உடம்பில்தான் கானமானது மிகுந்திருக்கும் அக்கானம் அல்லது நாதவழியே மனம் பதிந்து ஆன்மா தன்னை ஒளி வடிவமாகக் காணினும் உடலை விட்டு ஆகாய வடிவினனாகிய சிவனோடு கொள்ளும் தொடர்புக்கு நிகரில்லை கத்தூரி - கானம்.

18. அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே.

பொருள் : வட திசைக்குத் தலைவனாகச் செய்து அளகாபுரி அரானைச் செல்வத்துக்குத் தலைவனாகச் செய்த நிறைந்த தவத்தின் பயனைக் கருத்தில் கொண்டு, அவ்வாறு வடதிசையைப் போற்றி நீயும் சேமிப்பைக் பெருக்கினால் இவ்வடதிசைக்குத் தலைவனாக நீயும் ஆகலாம் என்று சொல்பவன் எமது தலைவனாவான்.

19. இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.

பொருள் : வடக்குத் திசைக்குத் தலைவன் விஷய வாசனைக்கு இடமான ஏழு ஆதாரங்களையும் அழித்துப் பாழ் நிலமாக்கினவன். அவன் பழமையாகவே எல்லாம் அறிபவன். பாவங்களைப் போக்கடிக்கின்ற பலியினைக் கொள்ளும் வடதிசையை இடமாக்கிக் கொண்ட இவரது உண்மையான தவத்தை நோக்கி அத்தவம் செய்வோரையே இடமாக்கிக் கொண்டு எழுந்தருளி யிருக்கின்றான். முதுபதி - சுடுகாடு.

20. முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் மலையது தானே.

பொருள் : இறப்பையும் பிறப்பையும் கருவில் உதிக்கும் முன்பே வரையறை செய்து சிவன் பொருந்தியுள்ள நியதியை அறியின் அது விளக்கம் மிக்க கண்மலருக்கு மேல் உள்ள சிரசாகும். அவ் இறைவனது உருவம் ஒளியும் ஒலியுமாகும். இதைத் திருக் கயிலாய மலையாகும் என்று சிலர் கூறுவர்.

21. வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தஎம்
கோனைப் புகுழுமின் கூடலும் ஆமே.

பொருள் : ஆகாயத்திலுள்ள மேகம் போன்ற கரிய திருமால் பிரமன் தேவர் முதலியோரது இழிந்த பிறவியை நீக்குகின்ற ஒப்பற்றவனும், ஆணவமாகிய காட்டு யானையைக் கதறும் படி பிளந்த எம் தலைவனுமாகிய சிவனைத் துதியுங்கள். அவனை அணைந்து உய்யலாம்.

22. மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.

பொருள் : தியானப் பொருளாக மனத்தில் தோன்றுகின்ற மாயநாடனாகிய சிவன், சீலர் நினைத்ததை அறிவான் என்ற போதும் இவர்தாம் நினையாது இருக்கின்றனர். கடவுளுக்கு என்னிடத்துக் கருணையில்லை என்று சொல்லுவர். இறைவன் தன் கருணைக்கு இலக்கு ஆகாமல் தப்ப நிற்பவர்க்கும் கருணை வழங்கி நிற்கின்றான். அவன் கருணை இருந்தவாறு என்னே !

23. வல்லவன் வன்னிக்கு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.

பொருள் : சர்வ வல்லமையுடையவனும், அக்கினி தேவனைக் கடலின் மத்தியில் நிலைக்கச் செய்த நீதியுடையவனும் ஆகிய இறைவனை இல்லை என்று கூற வேண்டா. படைத்தல் முதலியவற்றைச் செய்கின்ற கடவுளர்க்கும் தலைவனாய், இரவும் பகலும் ஆன்மாக்களுக்கு அருள் செய்து கொண்டிருக்கின்றான்.

24. போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி
தேற்றுமின் என்றும் சிவனடிக்கே செல்வம்
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.

பொருள் : போற்றிக் கூறியும் புகழ்ந்து பாடியும் நின்மலனாகிய சிவனது திருவடியை இடைவிடாது தாரகமாகக் கொண்டு தெளியுங்கள். சிவபெருமான் திருவடிக்கே நம் செல்வமெல்லாம் உரியது என்று எண்ணிப் புறம்பொருளில் மயங்கிக் கிடக்கின்ற மனத்தை மாற்றி நிற்பவரிடத்தில் சிவன் நிலைபெற்று நிற்பான்.

25. பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.

பொருள் : பிறவாதவனும், யாவற்றையும் ஒடுக்குபவனும், பேரருள் உடையவனும், அழிவில்லாதவனும் எல்லோர்க்கும் இடையறாது இன்பத்தை நல்குபவனும் ஆகிய சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் நீங்கள் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப்பேறு
அடையலாம். துறப்பிலி - இடையீடு இல்லாதவன், விருத்தம் - இடையூறு.

26. தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே

பொருள் : ஆன்மாக்களை என்றும் தொடர்ந்து நின்ற சிவனை எப்பொழுதும் வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் எங்கும் வியாபித்து உள்ளவனும் விசாலமான உலகமுழுவதும் கடந்து நின்றவனும் சகஸ்ரதன கமலத்தின் மேல் உடனாய் இருந்தவனும் ஆகிய சிவனது திருவடிப் பேறுகிட்டும். கமலகம் மலர்மேல் உட்கார்ந்திருந்தான் மலர்மிசை ஏகினான்

27.சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியின் உள்ளே புகுந்துநின் றானே.

பொருள் : சேர்க்கையின் இடம் என்று சொல்லப்படும் சுவாதிட்டான மலரின் கீழ் ஒளிபொருந்திய முகத்தையுடைய இறுதியில்லாத இறைவனது கருணை நமக்கே உரியது என்று அப்பெருமானைத் தினந்தோறும் வழிபடுவோரது புத்தியில் தானே புகுந்து பெயராது நின்றான். சந்தியெனத்தக்க - அந்தியில் தோன்றும் செவ்வான நிறத்தையுடைய என்னுமாம்.

28. இணங்கிநின் றான்எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.

பொருள் : எவ்விடத்தும் நீக்கமற நிறைந்துள்ளவனாகிய சிவன் ஆன்மாவோடு பொருந்தியுள்ளான். எல்லாக் காலத்தும் இருப்பவனாகிய பெருமான் மாறுபட்ட தன்மையில் உள்ளான். தேவர் உலகை ஆளும் சிவன் தனக்கெனச் செயலின்றி உள்ளான். அவன் தன்னை வழிபடுவோர்க்கு வழித்துணையாக உள்ளான்.

29. காணநில் லாய்அடி யேற்குஉறவு ஆருளர்
நாணகில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.

பொருள் : சிவத்தை விட்டு மாறிய நினைவு இல்லாத அடியார் மனத்திடை ஆணிவேர் போல் எழுந்தருளியிருப்பவனே ! சீவயாத்திரை முழுவதும் உதவக் கூடியவர் உன்னையன்றி வேறு உறவு யார் உள்ளார் ? ஆகையால இறைவனே அடியேனுக்கு ஞான கோசரப் பொருளாய் விளங்க வேண்டும். அப்போது நான் உன்னைத் தலைவனாக ஏற்றுக் கொள்ள வெட்கப்படமாட்டேன்.

30. வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான்நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்இன்று அழைப்பது ஞானம் கருதியே.

பொருள் : ஆகாயத்தில் விளங்கித் தானே பொழியும் மழையைப் போன்று இறைவனும் தானே வலியவந்து அருளைப் பொழியும் என்று சிலர் தயக்கம் கொள்வர். பசுவின் கன்று பால் கருதித் தன் தாயை அழைப்பது போல, என் நந்தியை நான் இப்போது அழைப்பது ஞானம் கருதியேயாம்.

31. மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

பொருள் : இறைவன் பூவுலகில் வாழ்கின்றவர்க்கு மானிட வடிவில் வெறிப்பட்டருளுவான். புவர்லோக வாசிகளுக்கு ஆகாய வடிவினனாக ஒளிவடிவில் வெளிப்பட்டு அருளுவான். சுவர்லோக வாசிகளுக்கு அவ்வண்ணமே தேவவடிவில் வெளிப்பட்டு அருளுவான். சித்திகளை விரும்பினவர்க்குச் சித்தனாக நின்று அருளுவான் நிறைவு பெற்ற மனத்தின் இடமாக நாதத்தை வெளிப்படுத்துபவனாகிய அவனுக்கு அறிவினிடமாக நின்று நான் அன்பு பூண்டிருந்தேன்.

32. தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீர்உலகு ஏழையும்
தாவு பிரான்தன்மை தானறி வார்இல்லை
பாவு பிரான்அருள் பாடலும் ஆமே.

பொருள் : சிவன் தேவர்கள் அனைவர்க்கும் தலைவன். அவன் மானிடர்க்கும் தலைவன். அவன் சீவ கோடிகளிடம் திசை எட்டு மேல், கீழ் எனப் பத்துப் பக்கங்களிலும் நிறைந்துள்ளான், அவனே விரிந்த நீரால் சூழப்பெற்ற ஏழு உலகங்களையும் கடந்து உள்ளான். இவனுடைய தன் ஒருவரும் அறிபவர் இல்லை. இவ்வண்ணம் வியாபித்துள்ள இறைவனது அருளை எம்மால் எவ்வாறு பாடமுடியும்

33. பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்லவல் லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

பொருள் : தொன்று தொட்டே இவ்வுலகில் கடவுளர் பலர் உளர் அக்கடவுளர் வழிபாட்டுக்குக் கிரியை விதிகள் ஏற்படுத்தி உண்மைப் பொருளை உணரார் ஆயினர். துதித்துப் பல தோத்திரப் பாடல்களைப்  பாடவல்லாரும் சிவத்தோடு கலந்திருந்து பெறும் உண்மை அறிவைப் பெறாதவராய் உளர். மனத்தினுள் அமைதியின்றி வாடுகின்றார்கள்.

34. சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.

பொருள் : சிவபெருமான் தேவர்க்கு அருளிய உண்மை நெறி, கலவைச் சாந்தில் வீசுகின்ற கஸ்தூரியின் மணம் போலச் சிவ மணம் வீசும். அவ்வுண்மை நெறி செல்ல அருமையான சுடர் போன்ற ஒளியினை நல்கும் அவனது ஆயிரம் திருநாமங்களையும் நடக்கும் போதும் இருக்கும் போதும் எப்போதும் பரவிக் கொண்டிருக்கிறேன். சாந்து - கலவைச் சந்தனம்.

35.ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவும்  ஆமே.

பொருள் : பிறர் படைக்காத சன்மார்க்க நெறியில் விளங்கும் சிவனைப் போற்றுங்கள். போற்றிப் புகழுங்கள். அவ்வாறு புகழ்ந்தான் ஈசான திக்குக்கும் சிரசில் கிழக்கு முதலாகவுள்ள அஷ்டதள கமலத்தை நிமிரும்படி செய்வன். அவ்வாறு உங்களது ஈசான முகம் விளங்கவும் ஆகும். மேல்திசை - உச்சி இங்கு விளங்குவது ஈசானமுகம்.

36. அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள்பெற லாமே.

பொருள் : உயிருக்குத் தந்தையை இறைவனைத் தெவிட்டாத அமுதம் போன்றவனை, தனக்கு ஒப்பில்லாதவனை, வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் வள்ளலை, ஊழியைச் செய்கின்ற முதல்வனை எவ்வகையாயினும், வழிபடுங்கள். வழிபட்டால் அவ்வகையே இறைவனது அருளையே பெறலாகும்.

37. நானும்நின்று ஏத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து
ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

பொருள் : நாள்தோறும் இறைவனை நானும் நிலையாக இருந்து வழிபடுவேன். அக்கினி போன்ற திருமேனியை யுடைய இறைவனும் வெளிப்பட்டு நின்றான். அவன் வானத்தில் கலைகள் நிறைந்த சந்திரனைப் போல உடல் இடமாக மகிழ்ந்து ஊன் பொருந்திய உடலில் சகஸ்ரதள கமலத்தில் பிராண ரூபமாய் இருக்கிற விதம் இதுவாகும்.

38. பிதற்றொழி யேன்பெரி யான்அறி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.

பொருள் : பெரியவனும் அரியவனும் ஆகிய சிவனைத் தோத்திரம் செய்வதை விடமாட்டேன். ஒரு தாயின் வயிற்றில் பிறவாதவனும் உருவமுடையவனுமாகிய சிவனைத் தோத்திரம் செய்வதை விடமாட்டேன். எங்களுடைய பெருமையான சிவனைத் தோத்திரம் செய்வதை விடமாட்டேன். எப்போதும் தோத்தரித்துக் கொண்டு இருக்கும் நானே பெரிய தவம் செய்பவனானேன். இந்நான்கு நெறியினையும் முறையே சீலம், நோன்று, செறிவு, அறிவெனக் கூறுவர்.

39. வாழ்த்தவல் லார்மனத்து உள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்று இறைஞ்சியும்
ஆத்தம்செய்து ஈசன் அருள்பெற லாமே.

பொருள் : வாயாரப் புகழ்ந்து வாழ்த்தவராது மனத்தினுள் விளங்கும் சோதியும் குற்றங்களைப் போக்கும் தீர்த்தம் போன்றவனும் அவ் ஆகாய மண்டலத்தில் வெளிப்படுகின்ற தேவ தேவனாகிய இறைவனைத் துதித்தும் எம் தலைவனே என்று வணங்கியும் நேசித்து வந்தால் அவ் இறைவனது அருளைப் பெறுதல் எளிதாகும். ஆத்தன் - நண்பன் எனப்படுவன்.

40. குறைந்து அடைந்த ஈசன் குரைகழல் நாடும்
நிறைந்து அடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சுஅடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.

பொருள் : சீவர்களின் குறையை நினைந்து சென்று இறைவனது ஒலிக்கின்ற திருவடியை நீங்கள் நாடுங்கள். அது பூரணமாகப் பெற்ற சிவந்த பொன் போன்ற ஒளியினை ஒத்திருக்கும். வஞ்சனை கொண்டு பிடிவாதம் செய்யாமல் அத்திருவடியை வணங்குவார்க்கு உள்ளத்தே புகுந்து வணங்கும் சிவன் உடம்பைப் புறம் என்று உணர்த்துவான். ஏக்கற்றவர் - ஆசையால் தாழ்ந்தவர்.

41. சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடைப் போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

பொருள் : திருப்பாற் கடலில் சீறி எழுந்த நஞ்சை உண்டருளிய மகாதேவனைத் திருத்தம் செய்த விளைநிலம் போன்ற மனத்தில் வைத்து வணங்க வல்லார்க்கு நாத ஒலி காட்டி (ஒளி பொருந்திய நெற்றியை யுடைய) உமையொரு பாகனும் அவர் மனத்தில் பெண்மானைக் கண்ட ஆண்மானைப் போன்று கூடி நின்றான்.

42. போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே.

பொருள் : சிவனிடம் அடைக்கலம் புகுந்து தோத்திரம் செய்வார்பெறும் பயனாவது நான்கு முடிகளையுடைய பிரமன் படைத்தபடியே மீளமீளப் படைக்கும் மாயையோடு கூடி சம்சாரப் பந்தத்தில் உழல்பவராயினும் திரட்சியான தோள்களையுடைய உமாதேவியின் தலைவனான் சிவன் வந்து பொருந்தலாம்.

43. அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்துஅங்கு ஒதுங்கவல் லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்து நின்றானே.

பொருள் : இறைவனது திருவடியைப் புகழ்ந்து பாடி, அன்பினால் கசிந்துருகி, இடைவிடாது திருவருமைச் சிந்தித்து ஞானத்தை நிலைக்கும்படி செய்து அங்கே நிலைத்திருப்பவர்க்கு அவரது மனத்தைச் செம்மை செய்து பூரணமாக நிறைந்திருப்பான். திரு ஐந்து எழுத்தை தூய மனத்துடன் இடையறாது வழுத்தி எனினுமாம்.

44. போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.

பொருள் : தேவர்கள் சுழுமுனையில் விளங்கும் ஏகபாத சிவனை வாழ்க என்று வாழ்த்துவார்கள். அசுரர்கள் அவனை வாழ்க என்று வாழ்த்துவார்கள். மனிதர்கள் அவன் திருவடி வாழ்க என்று கூறுவார்கள். நான் அவனை வணங்கி என் அன்பினுள் விளங்குமாறு நிலைபெறச் செய்தேன். இன்பம். பொருள், அறம், வீடு, இவைகளை முறையே மேற்கண்டவர்கள் விரும்பி வழிபடுவர் என்லாம்.

45. விதிவழி அல்லதுஇல் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

பொருள் : கடல்சூழ்ந்த உலகம் இறைவன் விதித்த முறையின்படி நடப்பதன்றி வேறு முறையால் அல்ல. இவ்விதிமுறைக்கு நாம் அடையும் போகம் விரோதம் இல்லை. சோதி வடிவான் இறைவனும் நாடோறும் துதிவழியாக வீட்டு நெறியை அளிக்கும் சிவ சூரியன் ஆவான்.

46. அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
புந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே.

பொருள் : இறைவனையே சிந்தித்திருக்கும் வண்ணம் மனம் திருந்திய அடியார்கள் செம்மேனி யம்மானே எப்பொருளுக்கும் இறைவனே மங்கள வடிவினனே என்று தொழ, பழமையானவனே, முதல்வனே, மேலானவனே என் நான் தொழ ஞானசொரூபியாய் எம் மனத்தில் எழுந்தருளியிருந்தான்.

47. மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பம் தானே

பொருள் : இல்லறத்திலிருந்து இறைபணி செய்பவர் பெரிய தவத்தை உடையவர்க்கு ஒப்பாவர். இடைவிடாது தியானத்தில் இருப்பவர், இறைவனது அன்பினுள் பொருந்தியிருப்பர். பனை மரத்தில் உள்ள பருந்து உணவெடுக்க வெளியே வரும் நேரத்தைத் தவிர பனையிலே ஒடுங்கியிருப்பது போல உலகில் ஈடுபட வேண்டிய நேரத்தில் ஈடுபட்டு மற்ற நேரங்களில் சிவ சிந்தனையில் ஈடுபடாதவர்க்கு இறையின்பம் கிட்டாது. பழத்தையுடைய பனைமரத்தின்மேல் பருந்து இருந்தாலும் பழத்தை நினைப்பதில்லை; இழிந்த பொருள்களை உண்ண நினைக்கும்.

48. அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

பொருள் : அடியார்கள் வணங்கும் தேவதேவனை என்னுடைய சிரசால் வணங்கி அப்பெருமானை நினைந்து, பூமியில் உள்ளார்க்கு அருளும் மேலானவனாகிய எந்தையை அணையாத விளக்கு என்று எண்ணிப் பொருந்தியிருந்தேன்.

49. நரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத்து ஒருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடந்துஎய்த லாமே.

பொருள் : பழமையான சீவன் பாசம் ஆகியவற்றுக்கு நாதனாகிய சிவனை நினைந்து, பசு என்று பாசம் என்றும் சொல்லப்பெறுகின்றவற்றின் இயல்பை அறிந்து சிவனோடு ஒன்று கூடவல்லார்க்கு அலை போன்று வரும் பசுக்கள் செய்யும் பாவமாகிய கடலை நீந்தி, பசு பாசங்களைக் கடந்து முத்திக் கரையை அடையலாம். பசு கட்டப்பட்ட சீவன், உயிர். பாசம் - தளை (ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலம்)

50. சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்று
ஆடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நான்இன்று அறிவது தானே.

பொருள் : இறைவனது திருவடியைச் சிரசில் சூடிக் கொள்வேன். மனத்தில் வைத்துப் போற்றுவேன். தலைவன் என்று பாடுவேன். பல மலர்களை அர்ச்சித்து வணங்கி நின்று கூத்தாடுவேன். அவ்வாறு ஆடி, அவனே தேவதேவன் என்று விரும்புவேன். நான் இன்று அவனைப் பற்றி அறிந்து செய்வது இவ்வளவு ஆகும்.

2. வேதச் சிறப்பு (வேதத்தின் பெருமை)

51. வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.

பொருள் : வேதத்தில் சொல்லப்படாமல் விட்டுப் போன நீதி ஒன்றும் கிடையாது. நாம் ஓதத்தக்க நீதிகள் எல்லாம் வேதத்தில் உள்ளன. அதனால் அனுபூதிமான்கள் தர்க்க வாதத்தை விடுத்து எல்லாப் பொருளும் நிரம்பிய வேதத்தை ஓதியே முத்தி அடைந்தார்கள். திருக்குறளே செந்தமிழ் மறை என்று கழகப் பதிப்பில் கண்டுள்ளது. ஆனால் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற வடமொழி வேதங்களைப் பற்றி தான் ஆசிரியர் கூறுகின்றார்.

52. வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

பொருள் : வேதங்களை ஓசையளவில் எடுத்தும் படுத்தும் சொல்கின்றவன் அவற்றை அறிந்தவன் ஆவான். வேதத்தை உரைத்த இறைவன் பிரமப் பொருள் விளங்கவும், அவன் அந்தணர் வேள்வி செய்வதன் பொருட்டும், உண்மைப் பொருளை உணர்த்தவும் வேதத்தைக் கூறியருளினான். ஆரிய வேதம் உரைத்தவன் பிரம்மா.

53. இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாய்உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர்  சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.

பொருள் : மந்திர வடிவான அழகிய வேதத்தில் உள்ளத்தை உருக்குகின்ற உணர்வாய் உணரப்படுகின்ற வேதத்தினில் விளங்கி, அச்சத்தை விளைவிக்கும் கம்பீரத் தொனியுடைய வேத மந்திரங்களாய், சூக்கும நிலையில் நின்றவன் முக்கண்ணையுடைய சிவபெருமான் ஆவான். இருக்கு என்று  சொல்லப்படுகின்ற சுலோகங்களையுடையது ஆரிய வேதம்.

54. திருநெறி யாவது சித்துஅசித்து அன்றிப்
பெருநெறி யாய் பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

பொருள் : தெய்வீக நெறியாவது, அறிவு அறியாமையற்ற வீடு பேறாய் உள்ள இறைவனை எண்ணி, குருவால் உணர்த்தப்பெறும் நெறியாய்ச் சிவத்தைப் பொருந்தும் ஓர் ஒப்பற்ற நெறியாகும். இந் நெறியினையே சிறப்பாக வேத முடிவான உபநிடதம் கூறும். தெய்வீக நெறியாவது குரு அருளால் சிவனடி சேர்ப்பிக்கும் நெறி என்று உபநிடதம் கூறும்.

55. ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

பொருள் : ஆறு அங்கங்களாக ஆராயப் பெற்று வரும் வேதத்தை அருளிச் செய்தவனை உடம்பின் பகுதியாகக் கொண்டு அவனது இயல்பை உணர்வார் இல்லை. தம்மின் வேறான அங்கமாக வைத்து வழிபட்டு, பிறகு தமது இஷ்ட காமியங்களைப் பெருக்கிக் கெடுகின்றார்களே. ஆறங்கமாவன; சிட்சை, கற்பகம், வியாகரணம், சந்தோவிசிதி, சோதிடம், நிருத்தம் என்பன.

56. பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே.

பொருள் : பாடல்களும், அவற்றுக்கான இசையும், அலைந்து ஆடுகின்ற ஆடல் மகளிரின் ஆட்டமும் நீங்காத உலகில் வேதநெறி காட்டும் உண்மை நெறிநில்லார், வேள்வி செய்யும் விருப்பம் உடையவராய் விரதமில்லாதவர் ஆவர். அவர் புறத்தே சென்று மாறுபாடுற்று அழிகின்றனர். பாட்டும் இசையும் ஆட்டமும் இறைவனது உண்மையை உணர அமைக்கப் பெற்றவை. இவ்வுண்மையை உணராமல் புறத்தோற்றத்தில் மயங்கிக் கெடுவதாகக் கூறுகின்றார்.

3. ஆகமச் சிறப்பு (ஆகமத்தின் பெருமை)

57. அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

பொருள் : கரிய நிறமுடைய உமாதேவியை இடப்பாகத்தில் உடையவன், அருளிச் செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. வணக்கத்தைச் செய்து பிரணவர் முதல் மகாளர் ஈறாக அறுபத்தறுவரும் ஐந்தாவது முகமாகிய ஈசான முகத்திலிருந்து அவற்றின் பொருளைக் கேட்டனராம். உமாபாகன் இருபத்தெட்டு ஆகமங்களை அறுபத்தாறு பேர்களுக்கு ஈசான முகத்திலிருந்து உபதேசித்தருளினான். ஐந்து முகங்களாவன; சத்தியோபாதம், வாம வேதம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்பனவாம்.

58. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.

பொருள் : இறைவன் ஆன்மாக்கள்மீது வைத்த கருணையால் கூறியருளிய ஆகமங்கள் எண்ணுவதற்கு இயலாது. இருபத்தெட்டுக் கோடியே நூறாயிரமாகும். இவற்றின் வழி தேவர்கள் இறைவனது பெருமையைச் சொன்னார்கள். நானும் அவ்வழியைப் பின்பற்றி அப் பொருளை வணங்குகிறேன். இந்த எண் ஆகமத்திலுள்ள கிரந்தங்களைக் குறிக்கின்றன. கிரந்தங்கள் - சூத்திரங்கள்.

59. பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.

பொருள் : அறிஞர் என்பவர் பதினெட்டு மொழிகளும் தெரிந்தவர். அத்தகையோர் ஆகமம் கூறும் உண்மையை நன்றாக அறிவர். அறிஞர்கள் அறிந்த பதினெட்டு மொழிகளும் அண்டங்களுக்கு முதல்வனாகிய சிவன் வெளிப்படுத்திய அறத்தைச் சொல்லுவனவாம். பதினெட்டு மொழிகளிலும் சிவன் சொன்ன அறமே உள்ளது.

60. அண்ணல் அருளால் அருளும்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

பொருள் : இறைவன் கருணையால் அருளிச் செய்த தெய்வத் தன்மை பொருந்திய ஆகமம், வானுலக வாசிகளாகிய தேவர்களுக்கும் அனுபவத்துக்கு வாராதது. அவற்றைக் கணக்கிடின் எழுபது கோடியே நூறாயிரமாகும். அவ்வாறு கணக்கிட்டு அறிந்தாலும் அனுபவன் இன்றேல் அவை நீரின்மேல் எழுத்துப் போலப் பயன்படாது போகும். ஆகமத்தை அனுபவமின்றி அறிந்தால் பயனில்லை.

61. பரனாய் பராபரம் காட்டில் உலகில்
தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.

பொருள் : மிக மேன்மையானவனாய்ப் பரஞானம் அபரஞானம் ஆகிய இரண்டையும் அறிவித்து, உலகைத் தாங்குபவனாய் சிவ புண்ணியத்தைத் தான் அருள் செய்யும்போது அரனாய், தேவர்கள் வணங்கி வழிபடும் சிவபெருமான் அறிவாய் ஆகமத்தில் விளங்குகின்றான். பராபரம் - பரஞானம், அபரஞானம். பரஞானம் - சிவஞானம், அபரஞானம் - கலைஞானம்.

62. சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.

பொருள் : சிவமாகிய பரம்பொருளிடமிருந்து சத்தியும் சதாசிவமும் மனத்துக்கு உவந்த மகேசர் உருத்திரர் தவத்தைச் செய்த திருமால் பிரமன் ஆகியோர் அவரவர் அறிவில் விளங்கிய ஒன்பது ஆகமங்களும் எங்களது குருநாதனாகிய நந்தியெம் பெருமான் வழிமுறையாகப் பெற்றவையாகும். பரமசிவத்திடமிருந்து பெற்ற ஆகமத்தைக் குருநாதனாகிய நந்தியெம் பெருமான் பெற்றான்.

63. பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றுஅவ் வியாமளம் ஆகும்கா லோத்தரம்
துற்றநல் சுப்பிரம் சொல்லு மகுடமே.

பொருள் : குருபரம்பரையில் பெற்ற ஆகமங்கள் காரணம், காமிகம், பொருந்திய நல்லவீரம், உயர்ந்த சிந்தியம், வாதுளம், மேலும் தந்திர சாத்திரமாகிய யாமளம், நன்மையாகும் காலோத்திரம், மேற்கொண்டு ஒழுகவல்ல நல்ல சுப்பிரம், சொல்லத் தகுந்த மகுடம் என்ற ஒன்பது மாகும். 1. காரணம், 2. காமிகம், 3. சிந்தியம், 4. சுப்பிரம், 5. வீரம், 6. மாதுளம், 7. காலோத்திரம், 8. மகுடம், 9. யாமளம். இவையே நந்தியெம்பெருமான் பெற்ற ஒன்பது ஆகமங்களாகும்.

64. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

பொருள் : இறைவன் அருளால் வந்த சிவாகமங்கள் கணக்கற்ற கோடிகளாகத் தொகுத்துச் சொல்லப்பட்டிருப்பினும், இறைவன் சொன்ன உண்மைப் பொருளை உணராவிடின் அவை அனைத்தும் நீர்மேல் எழுத்துப் போலப் பயனற்றவையாகும்.

65. மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

பொருள் : மழைக் காலமும் கோடைக் காலமும் பனிக்காலமும் இலயப்பட்டு நின்று, ஏரியும் வறட்சியடைந்திருக்கும் ஊழிக்காலத்து, வடமொழியையும் தமிழ் மொழியையும் ஏக காலத்து உபதேசித்து, சிருஷ்டி தொடங்குமுன் பராசத்திக்குச் சிவபெருமான் அருள் புரிந்தான்.

66. அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே.

பொருள் : ஆன்மாக்களைப் பந்தத்தினின்றும் நீக்கும் முறைமையினையும் பந்தத்தில் விடுகின்ற முறைமையினையும் கண் இமைத்தல் ஒழிந்து உயிர்போகின்ற முறைமையினையும், தமிழ்சொல் வடசொல் ஆகிய இரண்டாலும் உணர்ந்துகின்ற சிவனை உணர முடியுமோ? முடியாது. பந்தமும்வீடும் அருளுகின்ற சிவனை ஆகம அறிவினால் அறிய முடியாது.

4. குரு பாரம்பரியம் (குரு மரபு)

67. நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோடு எண்மரும் ஆமே.

பொருள் : திருநந்தி தேவனது அருளைப் பெற்ற குரு நாதர்களை ஆராயின் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நால்வரும் சிவயோக மாமுனிவரும் திரு அம்பலத்தில் திருக்கூத்தைத் தரிசித்த பதஞ்சலி வியாக்ரபாதர் ஆகியோரும் என்னோடு எட்டுப் பேர்கள் ஆவார்கள். சிவனிடம் உபதேசம் பெற்ற குருநாதர் எண்மராவர்.

68. நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவது என்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

பொருள் : சிவனது அருளால் குருநாதன் என்ற தகுதியை அடைந்தோம். அவனது அருளால் மூலாதாரச் சக்கரத்தில் விளங்கும் உருத்திரனை நாடினோம். உலகில் சிவனது அருள் எல்லாவற்றையும் செய்யும் அவன் வழிகாட்ட மூலாதாரத்திலிருந்து மேலேறிச் சிரசின் மேல் நிலை பெற்றிருந்தேன். இரண்டாம் அடிக்குப் பொருளாக இறந்த மூலனுடைய தேகத்தில் புகுந்ததைக் கூறுவர்.

69. மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துரு காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே.

பொருள் : திருமந்திரம் உபதேசம் பெற்ற வழிமுறையாவது மாலாங்கள், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கட்டுத்தறி போன்று அசையாதிருக்கும் காலாங்கி, கஞ்ச மலையனோ ஆகிய இவ் எழவரும் என்வழி வந்த மாணக்கர்களாம். திருமூலருடைய ஏழு மாணவர்கள். ஆவடுதுறையில் உடன் இருந்தவர்கள். இவர் துறவிகள்.

70. நால்வரும் நாலு திசைக்குஒன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்றது எல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர்ஆ னார்களே

பொருள் : சனகாதி நால்வரும் நான்கு திக்குகளுக்கு ஒரு நாதராய், அந்நால்வரும் தாம் பெற்ற பல்வேறு வகை அனுபவங்களைக் கொண்டு அவர் தாம் தாம் பெற்ற அனுபவத்தைப் பிறர்க்கு  எடுத்து அருளி, அந்நால்வரும் மேன்மையுடையவராய் குருநாதர் ஆனார்கள்.

71. மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

பொருள் : சிவயோக, மாமுனி, பதஞ்சலி, வியாக்கிர பாதர் ஆகிய மூவருக்கும் சனகாதியர் நால்வர்க்கும் சிவபெருமான் உபதேசம் செய்தது இறப்பையும் பிறப்பையும் நீங்கும்படி செய்யும் பெருமையுடைய நெறியாகும். செழுமையான சோம சூரியாக்கினி வடிவான பெருமான் குறைந்த பெருமையைக் கெடுப்பவன் அல்லன். நால்வர்க்கு அருளியது துறவு நெறி. மூவர்க்கு அருளியது அருள் நெறி இரு நெறியிலும் பிறவிநீக்கம் ஒன்றே குறிக்கோள். இரு நெறியையும் இணைப்பதே திருமூலர் நெறி.

72. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.

பொருள் : எட்டுத் திக்குகளிலும் பெருமழை பெய்தாலும் வளர்ச்சியைத் தரும் அருள்மிகு கடன்களைச் செய்யுங்கள் என்று சிவபெருமானது சிறந்த குளிர்ச்சியான பவளம் போலும் சிவந்த சடையிடம் காதல் கொண்டு பொருந்தியிருந்த சனகாதி நால்வர்க்கும் அருள் புரிந்தான். சடைமுடியில் அழுந்துதல்- யோகியர் இரவில் விளங்கும் செவ்வொளியில் அழுந்தி யிருத்தல்.

5. திருமூலர் வரலாறு (ஆசிரியர் வரலாறு)

(திருமூலர் மாணாக்கர்களுக்குத் தம் வரலாறு கூறுதல்)

73. நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்
சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற் றேனே.

பொருள் : என் குருநாதனாகிய நந்தியின் இரு திருவடிகளையும் என் சிரசின்மேல் கொண்டு அறிவினுள்ளே நிறுத்தி வணக்கம் செய்து, முச்சந்தி வீதியில் பொருந்திய மதிசூடிய சிவ பெருமானது திருவடியினைத் தினந்தோறும் தியானித்துத் திருமந்திரமாகிய ஆகமத்தைச் சொல்லத் தொடங்குகிறேன். அந்தி  முச்சந்தி, வளரும் தன்மையுள்ள மதி எனினுமாம்.

74. செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பிடல் எழுகோடி யுகம்இருந் தேனே.

பொருள் : சிவ ஆகமம் கூற வல்லவன் என்னும் அத் தகுதியைப் பெற்றும், அத் தகுதியை அருளும் குருநாதரின் திருவடியைப் பெற்றும், சிரசின் மேல் குறைவே யில்லாத ஆகாயப் பெருவெளியில் ஒப்பற்ற ஒளி அணுக்களின் அசைவினைத் தரிசித்தபின் ஒப்பில்லாத ஏழு ஆதாரங்களும் விளங்குமாறு பொருந்தியிருந்தேன்.

(பொன்னம்பலமும் ஆருயிர்களின் நெஞ்சத் தாமரையும் எனப் பொருள் கொள்வாரும் உளர்)

75. இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் சொல்வியைச் சேவித்து அடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

பொருள் : இந்திரனே ! இங்ஙனம் ஏழு ஆதாரங்களையும் பொருந்தி இருந்ததற்குரிய காரணத்தைக் கேட்பாயாக. அங்குப் பொருந்திய புவனங்களுக்குத் தலைவியாகிய அருமையான தவத்துக்குரிய செல்வியைச் சிதாகாயப் பெருவெளியில் பத்தியினாலே அவளை அடைந்து தரிசித்தபின் நான் அவளுடன் திரும்பினேன். இந்திரன் என்பவர் மாணாக்கர்களுள் ஒருவர். நான் தென்னாட்டில் வந்து தங்கியிருப்பதற்குரிய காரணம் யாதெனில் இங்குத்  தவஞ்செய்யும் அருந்தவச் செல்வியை வணங்குதற்கேயாம் என்றும் பொருள் கொள்ளலாம்.

76. சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுகூட னேஉணர்ந் தோமால்.

பொருள் : சாதாக்கியத் தத்துவத்தையும் முத்தமிழ் மொழியையும் வேதத்தையும் பெரிதும் நுகர்ந்திருந்தேன். அவ்வாறு அப்பொருள்களை நுகர்ந்த காலத்தில் நன்மையைத் தருவதான உணவின்றி இருந்தேன். அதனால் மனம் தெளிந்து பாராமுகமாய் இருந்தமையின் உண்மைப் பொருளை உணர்ந்தேன்.

படைப்புக் காலத்தில் சதாசிவனுடைய தத்துவமாகிய சாதாக்கிய தத்துவத்தினின்றும் வெளிப்பட்டது தமிழ் வேதம் என்க. மித+அசனி = மிதாசனி = அளவாய் உண்போன்.

77. மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியன் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

பொருள் : மாலாங்கனே ! இத்தென் திசைக்கு யான் வந்த காரணம் என்னவெனில் நீலநிறமான் திருமேனியையும் நேர்மையான அணிகளையும் உடைய சிவகாமி அம்மையோடு, மூலாதாரத்தை இடமாகக் கொண்டு சதாசிவம் முடிய நடத்தருளும் ஐந்தொழிற் கூத்தினது இயல்பினை விளக்கும் வேதத்தை உலகினார்க்குச் சொல்ல வந்தேன்.

78. நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவன்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

பொருள் : நேர்மையான அணிகளையுடைய சத்தி மேலான சிவானந்த வல்லி என்னும் திருநாமம் உடையவள். என்னுடைய பிறவியின் காரணத்தை வேரொடு களைந்து ஆட்கொண்டவள். எல்லையற்ற சிறப்பினை யுடையவள். சிவபெருமானோடு திருவாவடுதுறையுள் எழுந்தருளியிருப்பவள். அவளுடைய திருவடியைச் சேர்ந்திருந்தேன். அதாவது இடையறாது நினைந்திருந்தேன்.

79. சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்துறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவ நாமங்கள் ஓதியே.

பொருள் : சிவமங்கைதன் பங்கனாகிய சிவபெருமானைக் கூடியிருந்தேன். சிவனுக்குச் சிறப்பாக உடைய திருவாவடுதுறைக்கண் கூடியிருந்தேன். அத்திருக்கோவிலின் மேல்பாலுள்ள திரு அரசமரத்து நிழலில் கூடியிருந்தேன். சிவபோதி - சிவன் கோவிலில் உள்ள அரசு. சிவனது திருநாமத்தைச் சிந்தித்தருந்தேன்.

80. இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.

பொருள் : இவ்வுடம்பினுள் எண்ணற்ற காலம் தங்கியிருந்தேன். இரவும் பகலும் அற்ற சுயம்பிரகாச வெளியில் தங்கியிருந்தேன். தேவர்களும் துதிக்கும்படியான இடத்தில் பொருந்தியிருந்தேன். என் குருநாதராகிய நந்தியின் இரு திருவடிக்கீழ் அமர்ந்திருந்தேன்.

81. பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநான் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநான் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யும் ஆறே.

பொருள் : பின்னும் தயங்கிநின்று ஏன் பிறவியைப் பெறுகிறார்கள் ? அவர்கள் முற்பிறவிகளில் நன்றாக முயன்று தவம் செய்யாதவர்களாம் நான் நல்ல தவம் செய்தமையின் தன்னைப் பற்றித் தமிழில் ஆகமம் செய்யும் வண்ணம் எனக்கு நல்ல ஞானத்தை அளித்து இறைவன் பிறவியைக் கொடுத்தருளினான். திருமந்திரம் - தமிழ் ஆகமம்.

82. ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகத்தனுள்
ஞானப்பால் ஊட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

பொருள் : ஞானத் தலைவியாக உள்ள சத்தியோடு கூடிய சிவநகர் புகுந்து ஊனம் ஒன்றில்லாத ஒன்பது முடிவுகளுடன் கூடிய சந்திப்பில், தோத்திரமாகிய அபிஷேகத்தைச் செய்து இறைவனைப் பூசித்து நான் நல்ல அரசமரத்தில் கீழ் இருந்தேன். நந்தி நகர் - ஆவடு துறை.

83. செல்கின்ற வாறறி சிவன்முனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

பொருள் : திருக் கைலாயத்திலிருந்து செல்லுகின்ற வழியில் சிவனை நினைந்து மன்மதனை வெல்கின்ற ஞானத்தில் மிகுந்த முனிவராக முப்பத்து முக்கோடி தேவர்கள் அசுரர்கள் மானுடர்கள் ஆகியோர் தம்மிடம் சூக்குமமாயுள்ள விண் வழியாக இவ்வுலகுக்கு யான் வந்தேன். சிவமுனி - சிவமுன்னி, சிவன் அடியினை நினைந்து.

84. சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே.

பொருள் : உள்ளத்தின் கண்ணே சிறந்து விளங்குகின்ற நூல்களில் மிகச் சிறந்த தாகச் சொல்லப்பெற்ற வேதத்தின் உடலாகிய சொல்லையும் அவ்வுடலுள் ஒத்திருந்து உற்பத்தியாகின்ற பொருளையும் இறைவன் கருணையால் எனக்கு இங்கு உணர்த்தி யருளினான்.

85. நான்பெற் றஇன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

பொருள் : நான் இறைவனைப் பற்றி நினைந்து அடைந்த இன்பத்தை இவ்வுலகமும் அடைவதாக ஆகாயத்தை இடமாகக் கொண்ட அறிவு சொரூபமான சிவத்தைப் பற்றிச் சொல்லப் போனால், அது உடலைப் பற்றி உணர்வாகவுள்ள மந்திரமாகும். அவ்வுணர்வை அடிக்கடி முயன்று பற்றிக் கொண்டால் சிவம் வந்து உங்களிடம் பொருந்தி விடும்.

86. பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலும் ஆமே.

பொருள் : பிறப்பு இறப்பு இல்லாத நாதனை, நந்தி யென்னும் திருநாமம் படைத்தவனைச் சிறப்புகளோடு ஆகாய மண்டலவாசிகள் கரங்கூப்பித் தொழுது, நெஞ்சினுள் மறவாதவராய் மந்திரமாகிய மாலையால் பத்தியோடு பொருந்தியிருந்த ஓதவும் கூடும். சிவன் பிறவா யாக்கைப் பெரியோன் ஆதலின் பிறப்பிலி முதல்வன் எனப்படுவன். அவனை நந்தியென்னும் திருப்பெயரான் அழைப்பர்.

87. அங்கிமி  காமைவைத் தான்உடல் வைத்தான்
எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்
தங்கிமி காமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.

பொருள் : உடலை அளித்த இறைவன் உடலில் அக்கினியை மிகாமல் அளவுடன் வைத்தருளினான். பூலோகம் முதலிய ஏழ் உலகங்களையும் அழியாதவாறு அக்கினியை வைத்தான். குழப்பமில்லாமல் இருக்கத் தமிழ் ஆகம மாகிய திருமந்திரத்தை வைத்தான். எல்லாப் பொருளும் இந்நூலின் கண் அடங்குமாறு செய்தான். உடல் அங்கி சடராக்கினி, கடல் அங்கி - வடவாமுகாக்கினி.

88. அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந்தானே.

பொருள் : இறைவனது திருவடியையும் திருமுடியையும் காண்போம் என்று கருதி முயன்ற பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும் உருவத்தைக் காணாது மீளவும் பூமியில் கூடி, அடி கண்டிலேன் என்று திருமால் கூற, திருமுடியைக் கண்டேன் என்று பிரமன் பொய்யை உரைத்தான்.

89. பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே

பொருள் : இடபமும் மானும் மழு ஆயுதமும் பிரிவில்லாமல் கொண்ட மேலான பரம்பொருளின் கற்பனையாகவுள்ள இவ்வுலகில் எங்களது குருநாதனாகிய நந்தி ஒழிவனைக் கொடுத்து அடியவன் முடிமீது தன் மேலான திருவடியையும் சூட்டி யருளினான். பெற்றம் - அறம், மான் - கருணை, மழு - வீரம் இவைகளை உணர்த்தும் சரம் - அசைவன, அசரம் - அசையாதன.

90. நேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

பொருள் : அறியப்படும் பொருளையும் அறிகின்ற அறிவையும் மாயையின் விவரங்களையும், சுத்த மாயையில் விளங்கும் பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை ஆகிய சத்தியின் கூட்டத்தையும் அவ்வித சத்திகளில் விளங்கும் சிவத்தையும், சொரூப சிவத்தின் பிரபாவத்தையும் ஆகிய முழுவதையும் இந்நூலில் விளக்கியுள்ளேன். மாயை - அசுத்த மாயை; மாமாயை - சுத்த மாயை. பரைஆயம் - சத்தியின் கூட்டம்; அகோசர வீயம் - சொரூப சிவன்.

91. விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானம் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.

பொருள் : அகோசர விந்து நிலையைச் சொல்லப் போனால் அதுபரம் என்று பேருடன் கூடிய அறிவு மயமான சோதியாகும். அவ் ஆனந்த நந்தி எம்பெருமான் அளவில்லாத பெருமையுடையவன். அசைவற்றிருக்கும் அந்த ஆனந்த நடராஜமூர்த்தி யினது ஆணையின் வண்ணம் சிறப்பு மிக்க திருக்கயிலையினின்றும் இவ்விடம் வந்தேன். நந்தி மரபில்யான் வந்தேன் எனினுமாம். சொற்போந்து உபதேசம் பெற்று. கயிலை வழி  நந்தி பரம்பரை.

92. நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின்
நந்திஅரு ளாலே சதாசிவன் ஆயினேன்
நந்திஅரு ளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்திஅரு ளாலே நானிருந் தேனே.

பொருள் : நந்தியாகிய சிவபெருமான் திருவருளால் மூலன் உடம்பினுள் புகுந்தேன். பின்னும் அந்த நந்தியின் அருளால் சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் ஆகலின் இத்தமிழ் ஆகமத்தை ஓதினேன். அவன் அருளாலேயே திருவடிப் பேரின்பமாகிய அம்மையினை இம்மையே பெற்றுள்ளேன். அந்த நந்தியங் கடவுள் திருவருளால் இவ்வுலகத்து இருந்துள்ளேன்.

93. இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே.

பொருள் : அளவில்லாத மந்திரங்களில் சிவன் எழுந்தருள்வன். பொருந்தியுள்ள மூலத்திடத்தும் ஓம் என்னும் மூலமந்திரத்தினிடத்தும் இருப்பன். ஞாயிறும் திங்களும் ஒளி வீசும்படி ஆருயிர்களின் உடம்பகத்துக் காணும் மயிர்க்கால் தோறும் அருள் ஒளி தோன்றும். அதனால் அங்குச் சிவன் உறைந்தருள்வன். அருகுகின்ற என்பது அருக்கின்ற எனத்திரிந்து நின்றது அருகுதல் - பொருந்துதல்.

94. பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

பொருள் : எந்நாளும் அவன் அருள் துணையால் நிகழும் பேரன்பால் நந்தியங் கடவுளைச் சிவசிவ என்று இடையறாது ஏத்துகின்றேன். இரவும் பகலும் நெஞ்சத்து அவனையே இடையறாது நினைதலாகிய பரவுதலைச் செய்கின்றேன். அவன் திருவடியைப் பெறவே முயல்கின்றேன். அவன் ஒரு பெற்றியாய் என்றும் அழியா அறிவொளியாய் எவற்றையும் ஒளிர்விக்கும் ஆற்றல் ஒளியாய்த் திகழும் ஓங்கொளி வண்ணன். எம் தலைவன். திருமூலர் சோதிப் பிழம்பாய் உள்ள இறைவனை எப்போதும் நினைந்தும் பேசியும் வந்தார்.

6. அவை யடக்கம்

(அவையடக்கம் கூறலாவது அண்ணலின் பெருமையும் தன் சிறுமையும் கருதி அடக்கமாகக் கூறுதல்)

95. ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.

பொருள் : எம் சிவபெருமானது பெருமையை அறிவார் யார் ? அவனது அகலத்தையும் நீளத்தையும் கொண்ட பரப்பினை யாரே அறிய வல்லார் ? தனக்கென நாமமும் உருவமும் இல்லாத பெரிய சுடரினது வேரினையும் அறியாது அதைப் பற்றிப் பேசுகின்றேன்.

96. பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே.

பொருள் : சிவனது புகைழப் பாடுகின்றார் நெறியில் சென்று பாட அறியேன். இனி பக்தி மேலீட்டான் ஆடுகின்றவர் நெறியில் சென்று ஆடவும் அறியேன். போகத்தினால் நாடுகின்றவர் நெறியில் சென்று நாடவும் அறியேன். ஞானத்தால் தத்துவ விசாரணை செய்து ஆராய்கின்றவர் நெறியில் நின்று ஆராயவும் அறியேன். இவை நான்கும் முறையே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மைத் திருத்தொண்டின் குறிப்பாகும்.

97. மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.

பொருள் : நிலைபேறுடைய வேத வாக்கினாலும், ஓதுபவர் சுரத்திலுள்ள இனிய நாத ரூபமாக எழுகின்ற ஈசனைச் சூக்குமத்திலிருந்து தூல உலகைச் சிருட்டித்த நான்முகனும் எண்ணிக் கொண்டிருக்கும் அப்பெருமானை நம்மால் உணர முடியுமோ ? முடியாது. வாய்மொழி - வேதம்.

98. தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறா யிருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயன்அறி யாரே.

பொருள் : சிவபெருமான் குருவாய் எழுந்தருளி வந்து தத்துவ ஞானத்தை உரைத்தது திருக் கைலையின் அடிவாரத்திலாகும். வீடு பேற்றினை விரும்பியிருந்த முனிவர்களும் தேவர்களும் இத்தத்துவ ஞானத்தை வேறாக இருந்து ஓதும் தன்மையால் இதன் பயனை அறிய மாட்டாதவர் ஆயினர்.

7. திருமந்திரத் தொகைச் சிறப்பு

(திருமந்திரப் பாடல்களின் எண்ணிக்கையும் பெருமையும்)

99. மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
க்ஷகாலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.

பொருள் : திருமூல நாயனார் அருளிச் செய்த மூவாயிரம் தமிழும் உலகம் உய்ய நந்தி அருளியதாகும். ஒவ்வொரு நாளும் வைகறைப் பொழுதிலும் மற்றைய பொழுதுகளிலும் சிவக்கோலத்துடன் எழுந்து பொருளுணர்ந்து ஓதுவார் திருவருள் கைவந்தவராவர்.

100. வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே.

பொருள் : திருமந்திரமாகிய நல்லு நூலில் வைத்த தன்மை ஒன்பது தந்திரவகையாம். இம்மூவாயிரமும் முடிவான முத்தி நிலையைக் கூறுவது புத்தி பூர்வமாகச் சொன்ன மூவாயிரம் ஆகிய இவைதாம் பொதுவும் சிறப்புமாக அமைந்து ஓதுவார்க்கு நன்மை பயக்கும் முதல் ஐந்து தந்திரங்கள் பொது. பின் நான்கு தந்திரங்கள் சிறப்பு, நான்கு பொது, ஐந்து சிறப்பு என்ற கருத்தும் நிலவுகிறது.

8. குருமட வரலாறு (அஃதாவது மூலன் மரபு உரைத்தல்)

101. வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

பொருள் : ஏழு திருமடங்களும் நிலைபெற்ற நன்னெறியினைப் போதிப்பனவே. அவற்றுள் சிறந்து காணப்படுவது திருமூலர் திருமடமாகும். அதன்வழி இவ் ஒன்பது தந்திரங்களும் அவற்றிற்குரிய மூவாயிரம் திருமந்திரமும் வெளிப்போந்தன. இவற்றைத் திருமூலராகிய சுந்தரர் அருளிச் செய்தார். அதனால் இதற்குச் சுந்தர ஆகமம் எனவும் ஒரு திருப்பெயருண்டு.

102. கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

பொருள் : இறைவன் திருவருளால் மெய்யுணர்வு கைவந்த வழிவழித் தவத்தோர் காலாங்கர், அகோரர், மாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர், போக வேதர், திருமூலர் என ஏழு தமிழ் முனிவர் ஆவர், நிராமயம் - குற்றமின்மை.  இவ்வேழு மாடங்களும் சித்த மார்க்கத்தைப் போதிப்பன.

9. திருமூர்த்திகளின் சேட்டகனிட்ட முறை

(அஃதாவது, மும்மூர்த்திகளாகிய பிரமன், விஷ்ணு, ருத்திரன் ஆகியோரது இயல்பு)ஜியேஷ்ட-சேட்ட, கனிஷ்ட-கனிட்ட, மூத்த இளைய என்பனவாம்.

103. அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரிஅயற்கு ஆமே.

பொருள் : எல்லையில்லாத இளமைப் பருவமும், எல்லையில்லாத அழகும், எல்லையற்ற இறுதியும், அளவு செய்கின்ற காலமும், ஆகிய நான்கையும் நன்கு ஆராயின், ஆன்மாக்களுக்குச் சுகத்தைச் செய்யும் சங்கரன் ஒருவாற்றலும் குறைவு இல்லாதவன். தன் அடியாரால் சொல்லப் பெறும் எல்லையற்ற பெருமை யெல்லாம் திருமாலுக்கும் பிரமனுக்கும் ஆகுமோ ? ஆகாது.

104. ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித்து உலகம் பிணங்குகின் றார்களே.

பொருள் : மூலாதாரத்திலுள்ள ருத்திரனும், நீலமணி போன் வண்ணத்தையுடைய திருமாலும், சிருஷ்டிக்குக் காரணமாயுள்ள சுவாதிட்டான மலரில் இருக்கும் பிரமனும், ஆராயுமிடத்து இம் மூவரும் தொடர்பினால் ஒருவரே என்று துணியமாட்டாராய் வேறு வேறாகக் கருதி உலகவர் மாறுபட்டுப் பேசுகிறார்களே. என்னே இவரது அறியாமை !

105. ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
நீசர் அதுஇது என்பர் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூர்அறிந் தார்களே.

பொருள் : சிவன் இருவினைக்கு ஏற்ப உடம்பினைப் படைத்துக் காத்து அழிக்கும் முத்தேவர் ஆட்சிக்கு அப்புறம் உள்ளான். அம்மூவர் உண்டாவதற்குக் காரணமான மூலப் பொருளாகிய சிவனே உலகில் பெரிய தெய்வமாகும். மாசுடையோர் தெய்வர் அது என்றும் இது என்றும் மயங்குவாராய்ப் பிதற்றுகின்றனர். மாசில்லாத தூய்மை யுடையயோர் மூலமாகிய சிவனே பரம்பொருள் என்று உணர்ந்திருந்தனர்.

106. சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடுஒன்று ஆகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.

பொருள் : சிவனாதிய முதல்வன் மூவராகவும், ஐவராகவும் திருச்சிற்றம்பலமான சபையில் சிறந்து விளங்குவான். அச்சபையானது ஆறு ஆதாரங்களும் மகேசுவர சதாசிவம் பொருந்திய இரண்டும் கவிழ்ந்த சகஸ்ரதளம் ஒன்றும் நிமிர்ந்த சகஸ்ரதளம் ஒன்றுமாகப் பத்தாகும். அவற்றில் விந்தும் நாதமும் விளங்க அந்நிலையில் சபை முதலாகவுள்ள அவனுக்குச் சங்கரன் என்பது பெயராகும்.

107. பயன்அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர்அவ் வானவர் ஆலே.

பொருள் : சீவர்கள் அடையும் பயனை அறிந்து சிந்திக்கும் அளவில் பிரமனும் திருமாலும் சிவனுக்கு வேறானவர் அல்லர். அவர் மூன்று கண்களையுடைய சிவனது வழி நின்று முத்தொழிலைச் செய்பவராம். ஆதலின் அத் தேவரால் மேன்மை அடையுங்கள். வயன் - பயன்.

108. ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றேனே.

பொருள் : அழியாத தன்மை பெற்ற தேவர்கள் சூழ்ந்துள்ள திருச்சபையில் பால் போன்ற நிறமுடைய பெருமானை நான் வணங்கவும், நீ திருமாலுக்கு முதல் தொழிலாகிய சிருஷ்டி செய்யும் பிரமனுக்கு ஒப்பாவாய். ஆதலின் பூவுலகில் போதகாசிரியனாக இருந்து திருவடி ஞானத்தைக் கொடுத்தருள்க என்று அருளினான். பூவுலகில் போபோதாகாசிரியனாக இருந்து அருளைப் பரப்புக என்று இறைவன் திருமூலருக்கு அருளினான்.

109. வானவர் என்றும் மனிதர்இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் வேறில்லை
ஊனர்ந் தோரை உணர்வது தானே.

பொருள் : தேவர்கள்  என்றும் மனிதர்கள் என்றும் உள்ள இவர்கள், தேன் துளிர்க்கும் கொன்றை மலரையுடைய சிவனது அரளால் அன்றி, தாமே பொருந்தி, உணரும் தெய்வம் வேறொன்றும் இல்லை. மூவராகவும் ஐவராகவும் இவர்களின் வேறாகவும் உடலில் விளங்கும் சிவன் ஒருவனே என்பதை அறிவதாகும்.

110. சோதித்த பேரொளி மூன்றுஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித்து அவரை பிதற்றுகின் றாரே.

பொருள் : ஒளி விடுகின்ற பேரொளிப் பிழம்பாகிய சிவன், பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராகவும், பிரமன், விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐவராகவும் நின்ற தொன்மைக் கோலத்தை அறியாதவராகிய மூடர்கள் முறைமையாக உருத்திரன் திருமால் பிரமன் என்று வேறு வேறாகக் கருதி அவர்களைப் பேசுகின்றார்களே ! என்னே அவரது பேதைமை.

111. பரத்திலே ஒன்றாய்உள் ளாய்புற மாகி
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

பொருள் : மேன்மையான நிலையில் ஒப்பற்ற சிவமாய், எல்லாவற்றிலும் உள்ளும் புறமுமாகி, விருப்பத்தை உண்டாக்குவதில் திருமாலாய் சிருட்டித்தலில் பிரமனாகி, தகுதிக் கேற்ப ஒருவனே பலப்பல தேவராகத்தான் விளங்காதவாறு மறைவாக ருத்திரனாக நின்று சங்காரத் தொழிலையும் செய்வான்.

112. தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொடு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

பொருள் : சிவபரம்பொருளின் ஒரு கூறாகிய சதாசிவனாகிய எம் தலைவன், ஆகாயக் கூற்றில் பொருந்தி எல்லாத் தத்துவங்களிலும் ஊடுருவியும் வேறாயும் உள்ளான். அவனே உடலுள் பிராண ரூபமாகவுள்ள தலைவனாவான். அவனது மற்றொரு கூறு அசைவு ரூபமாக உள்ளது. சலமயன் தண்ணியனுமாம்.

 
மேலும் பத்தாம் திருமறை »
temple news
(காரண ஆகமம்) 1. உபதேசம் (குரு சீடனுக்குக் கூறும் வாசகம் உபதேசமாகும். குரு உபதேசத்தால் அருட்கண் ... மேலும்
 
temple news
(காமிக ஆகமம்) 1. அகத்தியம் (உடம்பில் விளங்கும் நாதம், இந்த அக்கினி உடம்பைத் தாங்கிக் கொண்டும், உண்பதைச் ... மேலும்
 
temple news
1. அட்டாங்க யோகம் (வீர ஆகமம்) (அட்டாங்க யோகம் என்பது இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், ... மேலும்
 
temple news
(சித்த ஆகமம்) 1. அசபை (அசபை என்பது செபிக்கப் படாமலே பிராணனோடு சேர்ந்து இயங்கும் மந்திரம் என்றபடி. இதுவே ... மேலும்
 
temple news
(வாதுளாகமம்) 1. சுத்த சைவம் (இயற்கைச் செந்நெறி) (சுத்த சைவமாவது சடங்குகளில் நில்லாது தலைவனையும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar